சைக்கிளுக்கு போடும் நம்பர் லாக்கை வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அதை அம்மாவின் கழுத்தில் வைத்து பூட்டியதால் விளையாட்டு விபரீதமானது.
இக்காலத்து குழந்தைகள் ரொம்பவும் சுட்டியாக, புத்திக்கூர்மையுடன் இருக்கின்றனர். அதை ரசிக்கும் பெற்றோர், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து முன்பே அறிவதில்லை. அப்படி ஒரு சம்பவம் தான் சீனாவில் நடந்துள்ளது.
சீனாவின் ஜியாங்க்சூ மாகாணத்தில் கடந்த 7ஆம் தேதி ஒரு சம்பவம் நடந்தது. 4 வயது குழந்தை நம்பர் போட்டு பூட்டப்படும் சைக்கிள் லாக்-ஐ வைத்து விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது, அருகில் இருந்த தனது அம்மாவின் கழுத்தில் அந்த குழந்தை பூட்டை மாட்டி பூட்டி விட்டான். இதை தாய் விளையாட்டாக ரசித்து கொண்டிருந்தார். ஆனால் அதன்பிறகு தான் அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனென்றால் விளையாடும் போது பூட்டின் லாக் கோடு நம்பரையும் குழந்தை மாற்றியிருந்தது. புதிய நம்பர் அந்த தாய்க்கு தெரியவில்லை. இதனையடுத்து பூட்டை திறக்க முடியாததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கடைசியில், தீயணைப்பு வீரர்கள் வந்து பூட்டை வெட்டி எடுத்தனர். இதனால் குழந்தைகள் செய்யும் எல்லா செயல்களையும் ரசிக்காமல் பெற்றோர் எப்போதும் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.