கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இனி டோக்கனுக்கு பதில் டிக்கெட் கொடுக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினம்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறைகளில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தற்போது பிளாஸ்டிக்கால் ஆன டோக்கன்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பயணிகள் டிக்கெட் கவுண்டரில் டோக்கனை பெற்று இறங்கும் இடத்தில் அதற்குரிய உள்நுழையும் இயந்திரத்தில் டோக்கனை காண்பித்தால் மட்டுமே உள்நுழையவோ வெளியேறவோ முடியும்.
சுழற்சி முறையில் இந்த டோக்கன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் டோக்கன் நடைமுறையை மாற்றி கியூ ஆர் கோடு பொறிக்கப்பட்ட காகிதத்தை நடைமுறைப்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
உள் நுழையவும் வெளியேறவும் டிக்கெட்டை பயன்படுத்தப்படும். ஒருவர் பயன்படுத்திய உடன் அதனை தூக்கி எறிந்துவிட முடியும். வேறு ஒருவர் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும்.
சென்னையில் உள்ள 40 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த திட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக இயந்திரங்களை மாற்றும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.