வாட்ஸ்அப் பேமெண்ட்ஸைப் பயன்படுத்தி பணம் அனுப்பினால் 51 ரூபாய் வரை காஷ்பேக் வழங்கும் திட்டத்தை வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.
இந்தியாவில் பேமெண்ட் செயலிகளுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருக்கிறது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட பல செயலிகளை பரிவர்த்தனைகளுக்காக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
வங்கிகளுக்கு சென்று பணப்பரிவர்த்தனைகள் செய்த காலம் மலையேறிவிட்டது எனலாம். ஏனென்றால், பேமெண்ட் செயலிகள் மூலம், ஸ்மார்ட்போன்களை உள்ளங்கையில் வைத்து நொடிப்பொழுதில் வங்கிப் பரிவர்த்தனைகளை முடிக்க முடியும்.
குறிப்பாக, நாள்தோறும் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் தொழிலதிபர்கள், வணிகர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கு இந்த பேமெண்ட் செயலிகள் மிகவும் உபயோகமாக இருக்கின்றன.
கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கைவசம் வைத்திருக்கின்றனர். கடந்த மாதம் வெளியான தகவல்களின்படி போன்பே செயலியை மட்டும் சுமார் 45 லட்சத்துக்கும் மேலான வணிகர்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.
இத்தகைய மிகப்பெரிய மார்க்கெட் பேமெண்ட் செயலிகளுக்கு இந்தியாவில் இருப்பதைக் கருத்தில் கொண்ட வாட்ஸ்அப் நிறுவனமும், இந்தியாவில் வாட்ஸ்அப் பேமெண்ட்ஸைத் தொடங்கியது.
ஆனால், மற்ற செயலிகளைப் போல் பெரிய ஆதரவு வாட்ஸ்அப் பேமெண்ட்ஸூக்கு கிடைக்கவில்லை. ஏனென்றால், போன்பே, கூகுள்பே உள்ளிட்ட செயலிகள் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கேஷ்பேக், ரிவாட்ஸ், கிஃஃட் கூப்பன் உள்ளிட்ட பரிசு பொருட்களை வாரி வழங்குகின்றனர்.
மேலும், இந்த செயலிகள் பயன்பாட்டுக்கு வந்தபோது, தங்களது செயலியில் இருந்து பிறருக்கு பணம் அனுப்பினால் கூடுதல் கேஷ்பேக் ஆஃபர்களையும் அள்ளிக் கொடுத்தனர். இந்த ஆஃபர்கள், சலுகைகளை வாடிக்கையாளர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று, குறுகிய காலத்திலேயே வளர்ச்சிப்பாதையில் ஜெட் வேகத்தில் பயணத்தன.
இதேபாணியை இப்போது வாட்ஸ்அப் பேமெண்ட்ஸூம் கையில் எடுத்துள்ளது. வாட்ஸ்அப் பேமெண்ட்ஸில் இருந்து பிறருக்கு பணம் அனுப்பினால் ரூ.51 வரை காஷ்பேக் கிடைக்கும்.
இதில் இருக்கும் ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால் 5 பேருக்கு பணம் அனுப்பினால் மட்டுமே உங்களுக்கு கேஷ்பேக் கிடைக்கும். சலுகை என பார்க்கும்போது, எவ்வளவு தொகை அனுப்ப வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை.
எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அனுப்பி, கேஷ்பேக்கை பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாக, 5 பேருக்கு ஒரு ரூபாய் வீதம் அனுப்பிக்கூட கேஷ்பேக்கை பெற்றுக்கொள்ளலாம். இந்த கேஷ்பேக் ஆஃபர் “Give cash, get Rs 51 back” என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
அதாவது பணத்தை கொடு கேஷ்பேக்கை பெறு என்ற தீமில் வாட்ஸ்அப் விளம்பரம் செய்து வருகிறது. ஆன்டிராய்டு பீட்டா வெர்சன் வாட்ஸ்அப் யூசர்களுக்கு மட்டுமே இந்த கேஷ்பேக் ஆஃபர் கிடைக்கும்.
பேமெண்ட் செயலியை விரிவுப்படுத்த வாட்ஸ்அப் கையில் எடுத்துள்ள இந்த யுக்தி, யூசர்களிடையே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.