இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் கரடி ஒன்று காட்டிற்குள் சுதந்திரமாக விடப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
அந்த வீடியோவில் , மனிதர்கள் வசிக்கும் இடம் நோக்கி இமயமலை கருப்புக் கரடி (Himalayan black bear) ஒன்று வந்துள்ளது. அதனை மீட்பு குழுவினர் உதவியோடு பிடித்து, பாதுகாப்பாக கூண்டில் அடைத்து காயம் ஏதும் இல்லாதவாறு வனத்திற்குள்ளே மீண்டும் விட்டுள்ளனர்.
இதில் பாதுகாப்பு குழு மற்றும் கரடிக்கு எவ்வித காயமும் ஏற்பட வில்லை என கூறியுள்ளார். கரடி அதன் இயற்கையான வாழ்விடத்திற்கு விடுவிக்கப்பட்ட பிறகு அவள் மகிழ்ச்சியாக இருந்தாள் என பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவோடு பதிவிட்டுள்ளார்.
இமயமலை கருப்புக் கரடி (Himalayan black bear) என்பது இந்திய இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஆசிய கருப்பு கரடியின் துணையினம் ஆகும். நீளமான, அடர்த்தியான மென் முடிகளும் மற்றும் சிறிய வெள்ளை நெஞ்சு குறியும் இவற்றை ஆசிய கருப்பு கரடிகளிடமிருந்து வேறுபடுத்துகின்றன.
நேபாளம், சீனா, உருசியா மற்றும் திபெத்தின் 10,000 முதல் 12,000 அடி உயரமுள்ள வெப்பமான இடங்களில் கோடைக்காலங்களில் இமயமலை கருப்பு கரடிகளை காணமுடியும்.
குளிர் காலத்திற்காக இக்கரடிகள் 5,000 அடி வரை வெப்பமண்டலக் காடுகளை நோக்கி கீழிறங்கி வந்துவிடுகின்றன. சராசரியாக இமயமலை கருப்புக் கரடிகளின் உடலானது மூக்கிலிருந்து வால் வரை 140 முதல் 170 சென்டிமீட்டர் நீளம் கொண்டுள்ளது.
மேலும், இவற்றின் உடல் 91 கிலோ முதல் 120 கிலோ வரை எடை கொண்டதாக உள்ளது. குளிர்காலத்தை தூங்கிக் கழிக்கும்போது இவ்வகைக் கரடிகள் கொழுப்பு மிகுந்து சுமார் 180 கிலோ எடை வரைக்கும் கூட இருப்பதுண்டு.
கரடி காட்டிற்குள் விட்டவுடன் சுதந்திரமாக தனது இருப்பிடம் நோக்கி வேகமாக ஓடிச் சென்றது.