நாசாவின் எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் அமெரிக்க விமானப்படையில் பணியாற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டரும் இடம்பெற்றுள்ளார்.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘நாசா’ தரப்பிலிருந்து எதிர்கால விண்வெளி பயணங்களுக்கான அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதற்கான வின்வெளி வீரர்களை தேர்வு செய்யும் பணி சமீபத்தில் நடைபெற்றது. இதற்கு, தங்களை தேர்வு செய்ய வேண்டும் என அமெரிக்காவின் 50 மாகாணங்களை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர்.
அவர்களில் முதற்கட்டமாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விமானப்படை வீரரும், டாக்டருமான லெப்டினன்ட் கர்னல் அனில் மேனன், 45, என்பவரும் தேர்வாகி இருப்பதாக நாசா அறிவித்து உள்ளது.
விண்வெளிக்கு பயணிக்கும் விமானப்படையை சேர்ந்த முதல் டாக்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாசாவின் ‘ஸ்பேஸ் எக்ஸ் டெமோ- – 2’ பணிகளின்போது, விண்வெளிக்கு ஆட்களை அனுப்புவதில் உதவிய அனில் மேனன், தற்போது அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தவும், விண்வெளியில் மனித குலத்தின் நலனுக்காக பணியாற்றவும் தேர்வாகி இருப்பதாக நாசா அறிவித்துள்ளது.
புதிதாக தேர்வு செய்யப்பட்டோருக்கான பயிற்சிகளின் தொடக்கவிழா ஹூஸ்டனில் ஜான்சன் விண்வெளி மையம் அருகே நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் அனில் மேனன் உள்ளிட்ட 10 பேரையும் நாசா நிர்வாகி பில் நெல்சன் அறிமுகப்படுத்தினார். அவர் கூறும்போது, ”இவர்கள் ஒவ்வொருவரிடமும் பல்வேறு தனித்துவமான அடையாளங்கள் உள்ளன. ஆனால் அவற்றை மறந்து, அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டின் லட்சித்திற்காக பாடுபடுவார்கள்,” என்றார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் ஏற்கனவே விண்வெளிக்கு பயணித்து இருந்தனர்.
இந்நிலையில் ஜூலை மாதம் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியர் சிரிஷா பண்ட்லா, விண்வெளிக்கு பயணித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்றாவது பெண் என்ற பெருமையை பெற்றார்.
முன்னாள் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா விண்வெளியில் பயணம் செய்த ஒரே இந்திய குடிமகன் ஆவார்.