
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று பிற்பகல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டுச் சென்றது. ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேல் பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்துள்ளது. ஹெலிகாப்டரில் ராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் பயணம் செய்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மீட்புப்படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
இதனிடையே, இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்தியது. அப்போது இந்த விபத்து குறித்து பிரதமரிடம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். இதை அடுத்து, அமைச்சர் ராஜ்நாத் சிங் குன்னூருக்கு வரவுள்ளதாகவும், விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட உள்ளதாகவும் தகவல் வெளியானது.
மேலும் இந்த விபத்தில் இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் இன்று ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம் சூலூரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணி அளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கிச் சென்றனர்.
ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பாதையிலுள்ள காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் எனும் பள்ளத்தாக்கு பகுதிக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமாக இருந்துள்ளது. இதனால், ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த விபத்தில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு குன்னூர் ராணுவ மருத்துவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தோருக்கு சிகிச்சை தர சிறப்புக்குழு நீலகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடல்கள் தீயில் கருகியுள்ளதால் இறந்தவகளின் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்துக்கு ஆட்சியர் அம்ரித், எஸ்.பி.,ஆசிஸ் ராவத், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் விரைந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

விமானத்தில் பயணித்தவர்கள் விவரம்
- முப்படை தளபதி விபின் ராவத்
- மதுலிகா ராவத்
- பிரிகேடியர் லிடர்
- லெப்டினன் கர்னர் ஹர்ஜிந்தர் சிங்
- குர்சேவர் சிங்
- ஜிஜேந்தர் குமார்
- விவேக் குமார்
- சார் தேஜா
- கவில்தார் சத்பால்
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் ஐஏஎப் எம்ஐ-17வி5 ரகத்தைச் சேர்ந்தது என்று இந்திய விமானப்படையின் அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.