― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?திருவண்ணாமலை கோவிலில் 400 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டு பிடிப்பு!

திருவண்ணாமலை கோவிலில் 400 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டு பிடிப்பு!

- Advertisement -

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ்பன்னீர்செல்வம் மற்றும் சுதர்சன், உதயராஜா ஆகியோர் இணைந்து நடத்திய ஆய்வில் அருணாசலேஸ்வரர் கோவிலின் தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரத்தின் விதானத்தில் பாதி அழிந்த நிலையில் ஒரு ஓவியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஓவியத்தில் முருகர் மயில் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து சதுர்புஜத்துடன் காட்சி தர, அவரின் வலது பக்கம் வள்ளியும், இடப்பக்கம் தெய்வானையும் காட்சி தருகின்றனர்..

முருகன் தனது இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்டு, தொடைவரை ஆடை அணிந்து தனது வாகனமான மயிலின் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து “சிகிவாகனராக” நீள்வட்ட பிரபையினுள் காட்சி தருகிறார்.

கந்த புராணம் கூறும் முருகனின் 16 கோலங்களில் ஒன்று “சிகிவாகனர்” என்பது குறிப்பிட தகுந்தது.

முருகனின் வலப்புறம் உள்ள வள்ளியும் இடப்புறம் உள்ள தெய்வானையும் மிகவும் சேதமுற்று இருப்பதால் தெளிவாகக் காணக்கிடைக்கவில்லை. இடப்புறம் தெய்வானையின் அருகே சேடிப்பெண் ஒருவர் அக்காலத்திய உடை மற்றும் கொண்டை அணிந்து சாமரம் வீசும் காட்சி உள்ளது.

அதற்கு மேல் இடப்புறம் உள்ள ஓவியம் முற்றிலும் சிதைந்துள்ளது. அதே போல வலப்புறம் வள்ளியின் அருகே காட்டப்பெற்றுள்ள சாமரம் வீசும்ம் சேடி பெண் மிகவும் சிதைந்து கால்கள் மட்டும் தெரிகிறது. அதற்குமேல் வலப்புறமும் ஓவியம் மிகவும் சேதாரமாகி உள்ளது.

இவ்ஓவியத்தில் சுண்ணாம்பு, கருப்பு மை மற்றும் உலோக வண்ணங்களான சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய ஐந்து வர்ணங்களையும் சேர்த்து பஞ்சவர்ண ஓவியமாகத் தீட்டியுள்ளனர்.

இங்குள்ள ஓவியத்தில் தீட்டப்பட்டுள்ள வண்ணம் மற்றும் காட்டப்பட்டுள்ள ஆபரணங்கள் யாவும் தஞ்சை பெரிய கோயிலின் நாயக்கர் கால ஓவியத்துடனும், ஆந்திர மாநிலம் லேபாக்ஷி வீரபத்திரர் கோவில் ஓவியத்துடனும் ஒத்துப் போவதால் இதனை நாயக்கர் கால ஓவியமாகக் கருதலாம்.

திருவண்ணாமலை கோவிலின் ராஜ கோபுர திருப்பணி மற்றும் மதில்களில் எல்லாம் தஞ்சை நாயக்க மன்னரான சேவப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டவையே ஆகும்.

எனவே இவ்ஓவியத்தை 16-ம் நூற்றாண்டின் கடை பகுதியான சேவப்ப நாயக்கர் காலத்தை ஓட்டியதாக இதனைக் கருதலாம். சுமார் 400 வருடம் பழமையான இவ் ஓவியத்தைச் சிதைவிலிருந்து மீட்டு தமிழக தொல்லியல் துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் முறையாக ஆவணம் செய்து இதனை புணரமைத்து இவ் ஓவியத்தைப் பாதுகாத்திட முன் வர வேண்டும் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version