திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருவிழா பிரசித்தி பெற்றது. நடப்பாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர், கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் 4-ம் நாளில் திருநெல்வேலி என பெயர் வர காரணமாக அமைந்த நெல்லுக்கு வேலியிட்ட வைபவம் நடைபெறும்.
5-ம் திருவிழாவில் தைப்பூச மண்டபத்தில் தைப்பூச தீர்த்தவாரியும், மறுநாள் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது. வழக்கமாக டவுன் ஆர்ச் அருகே உள்ள வெளித்தெப்பத்தில் தெப்பத் திருவிழா நடக்கும்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக உள்தெப்பத்தில் இவ்விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் உள் பிரகாரத்திலேயே நடைபெற உள்ளது.
கழுகுமலை
தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.
கொடிமரத்துக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்களுக்கு பின்னர், 8 மணிக்கு மேல் திருக்கொடியேற்றி மகாதீபாராதனை நடந்தது. கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானைக்கும், சோமாஸ் கந்தர், அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
திருவிழாவின் முதல் நாளான நேற்றிரவு கழுகாசலமூர்த்தி வள்ளி தெய்வானையுடன் பூச்சப்பரத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
10-ம் திருநாளான தைப்பூசத்தன்று (18-ம் தேதி) காலை 6 மணிக்கு சுவாமி சட்ட ரதத்திலும், விநாயகப் பெருமான் கோரதத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், கோயில் தலைமைக் கணக்கர் செண்பக ராஜ் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.
செங்கோட்டை
தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகர சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும் திருவிழா கொரோனா காரணமாக அரசு வழிக்காட்டுதல்களுக்கு உட்ப்பட்டு நடைப்பெறள்ளது.