மஹிந்திரா க்ரூப்பின் சேர்மன் ஆனந்த் மஹிந்திராவின் ஒரே ஒரு டுவிட்டர் பதிவால் தமிழகத்தில் உள்ள கொல்லிமலை உலகளவில் ட்ரெண்டாகி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடிய தொழிலதிபர்களுள் ஒருவர் மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப்பின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. அதிலிலும் குறிப்பாக, டுவிட்டரில் பெரும்பாலான நேரங்களில் ஆன்லைனில் இருக்கக்கூடியவர்.
டுவிட்டரில் நெட்டிசன்களின் கேள்விகளுக்கும், கருத்துகளுக்கும் அவ்வப்போது பதிலளிக்கக்கூடியவரான ஆனந்த மஹிந்திரா தன்னை கவர்ந்த படம் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த வகையில் சமீபத்தில் எரிக் சொல்ஹெய்ம் என்பவர் பகிர்ந்துக்கொண்ட நமது தமிழகத்தில் உள்ள கொல்லி மலையின் படத்திற்கு தனது உணர்ச்சிவசமிக்க கருத்தினை ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ளார்.
மஹிந்திரா சிஇஓ-வின் அந்த டுவிட்டர் பதிவில், “எனது சொந்த நாட்டை பற்றியே எனக்கு தெரிந்தவை குறைவு என்பதை தொடர்ந்து காண்பித்து கொண்டிருக்கிறீர்கள், எரிக். இது தனித்துவமானது. இந்த சாலையை யார் உருவாக்கியது என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன் மற்றும் இந்த சாலையில் பயணம் செய்ய எனது மஹிந்திரா தார் வாகனத்தை மட்டுமே நான் நம்புவேன்” என கூறியுள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்விட்டை தொடர்ந்து, அவரை பின்பற்றும் வெளிநாட்டினர் பலர் கொல்லி மலை குறித்து விசாரித்து வருகிறார்கள். இதனால் வெளிநாட்டு நெட்டிசன்கள் மத்தியிலும் கொல்லி மலை சாலை கவனத்தை பெற்றுள்ளது.
வெளிநாட்டினர் மட்டுமின்றி, நம் இந்தியாவிலும், இவ்வளவு ஏன் நமது தமிழகத்தில் கூட சிலருக்கு கொல்லி மலையை பற்றி தெரியவில்லை.
ஆனந்த மஹிந்திரா ட்விட்டிற்கு கீழே அத்தகையவர்களும், லாக்டவுன் முடிந்த பின்னர் அங்கு ஒரு விசிட் அடித்துவிட்டு வரவேண்டும் என கமெண்ட் செய்துள்ளனர்.
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையை பற்றி தெரிந்தவர்கள், இந்த மலையின் வரலாறு குறித்தும், மூலிகை குணங்கள் குறித்தும் விளக்கமளித்து உள்ளனர்.
இந்தியாவில் அதிக மூலிகைகள் அடங்கிய மலைகளில் கொல்லி மலையும் ஒன்று. பல தீராத நோய்களுக்கு தீர்வு அளிக்கக்கூடிய மூலிகைகள் இப்போதும் கொல்லிமலையில் உள்ளன.
இதனால் இந்த மலையை காக்க வேண்டும் என பல அரசியல் தலைவர்கள் இதற்குமுன்னும், இப்போது தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
சமீப ஆண்டுகளாக கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.
மக்கள் ஒரிடத்தில் கூடினாலே, அங்கு குப்பை சேரும் என்பது எழுதப்படாத விதியாயுற்றே! கொல்லி மலையிலும் அவ்வாறுதான் குப்பைகள் அதிகரிக்க துவங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளன.
தூரத்தில் இருந்து பார்க்கவே ராட்சச உருவத்தோடு காட்சியளிக்கும் இந்த மலையில் மட்டும் மொத்தம் 70 யு-டர்ன்கள் உள்ளன நாமக்கல் முதல் திருச்சி மாவட்டம் வரையில் இதன் மலை தொடர்கள் பரந்து விரிந்துள்ளன.
மொத்தம் 1300மீ உயரம் கொண்ட இந்த கொல்லி மலை 300கிமீ வரை நீளம் கொண்டது. அதிகமான உயரம், 70 யு-டர்ன்கள் மற்றும் ரம்மியமான தோற்றம் உள்ளிட்டவை காரணமாக இந்த மலைக்கு பைக் ரைடர்ஸ் வரத்து அதிகரித்து வருகிறது.
ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டால் இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்த மலையின் டாப்-ஆங்கிள் ட்ரோன் படங்கள் இணையத்தில் வைரலாகின.