மல்லாதி சந்திரசேகர சாஸ்திரி : பிரபல பிரவசனகர்த்தா மல்லாதி சந்திரசேகர சாஸ்திரி சற்று முன்னர் காலமானார். அவருக்கு வயது 96. இன்று மாலை ஹைதராபாத்தில் தம் இல்லத்தில் சிவ ஐக்கியம் அடைந்தார்.
இவர் மல்லாதி தட்சிணாமூர்த்தி தம்பதியருக்கு 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி பிறந்தார். மல்லாதி குடும்பம் அமராவதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வேதக் கல்வியிலும் சனாதன சம்பிரதாயத்திலும் சிறப்பான புகழோடு விளங்கியது. சிறுவயதில் சந்திரசேகர சாஸ்திரி தன் தாத்தா மல்லாதி ராமகிருஷ்ணரிடம் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழி இலக்கியங்களைக் கற்றார்.
மல்லாதி சந்திரசேகர சாஸ்திரி தன் பதினைந்தாம் வயதிலிருந்தே புராண பிரவசன யக்ஞம் செய்யத் தொடங்கினார். ஹரிகதை, நாடகம் புராணம், இதிகாசம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கேட்போரைக் கவரும் விதத்தில் பிரவசம் செய்வது இவருடைய தனிச் சிறப்பு.
இவருடைய நீண்ட உபன்யாசப் பயணத்தில் பலப்பல பிரமுகர்கள் பல முக்கியமான அமைப்புகள் இவருக்கு சன்மானங்களும் விருதுகளும் அளித்துப் பெருமை கொண்டன. புராண வாசஸ்பதி விருது பெற்றுள்ளார். வேதத்திலும் அஷ்டாதச புராணங்களிலும் அதிகாரப்பூர்வமான நிபுணராக மக்களால் ஏற்கப்பட்டார்.
அதில் முக்கியமாக திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீவேங்கடேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்திற்கு நேர்முக வர்ணனை செய்பவராக பாலாஜி கல்யாண வைபவத்தை பக்தர்களின் கண் முன் கொணர்ந்து அபிநவ வியாச விருது கிடக்கப் பெற்றார். பத்ராசலம் சீதாராம கல்யாண பிரம்மோற்சவத்தில் இவருடைய பிரவசம் தனிச் சிறப்பாக பக்தர்களால் ஏற்கப்படும்.
அகில இந்திய வானொலி, தொலைக்காட்சிகளில் எண்ணற்ற ப்ரவசனங்கள் செய்துள்ளார். தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் பாண்டித்தியம் பெற்றவர். பல ஆண்டுகள் தர்ம சந்தேகங்களைத் தீர்த்து தர்ம சூட்சுமங்களை ஆத்திகர்களுக்கு விளக்கியுள்ளார்.
உகாதி பஞ்சாங்க ஸ்ரவணம், சதுர் வேதங்கள், புராண, இதிகாசங்களை சாஸ்திர ரீதியில் பிரவசனம் செய்து ஆத்திகர்களுக்கு தர்ம மார்கத்தை காட்டிய உபய வேதாந்த பண்டிதர் மல்லாதி சந்திர சேகர சாஸ்த்ரி.
மறைந்த முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி யின் ஆட்சியில் மல்லாதி சந்திரசேகர சாஸ்த்ரி பஞ்சாங்க சரவணம் செய்தார்.
– ராஜி ரகுநாதன், ஹைதராபாத்