நாள்தோறும் ஏதாவது ஒரு செய்தி, வீடியோ வைரலாகி வருவது வழக்கமாகிவிட்டது. சில வீடியோக்கள் மனதை உலுக்கும் வகையில் இருந்தாலும், சில வீடியோக்கள் மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடும்.
சில செய்திகள், நம்பிக்கையை தரும். அந்த வரிசையில், குழந்தைகள், பெண்களை ஏற்றிக்கொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு திடீரென் வலிப்பு ஏற்படவே, பெண் பயணி ஒருவர் பேருந்தை இயக்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் உள்ள வேளான் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா சென்றிருந்த குழு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
குழந்தைகளும், பெண்களும் அடங்கிய அந்த குழு சென்ற பேருந்தை ஆண் ஓட்டுனர் ஒருவர் இயக்கியுள்ளார். சுற்றுலா முடிந்து திரும்பி கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது.
வலிப்பு ஏற்பட்டதால், கை கால்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார். அப்போது கூட்டத்தில் இருந்த 42 வயது பெண் பயணி ஒருவர், சமயோசிதமாக செயல்பட்டு பேருந்தை இயக்குவதாக உறுதி அளித்திருக்கிறார்.
யோகிதா சாதவ் என்ற அந்த பெண், சிக்கலில் இருந்த குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ஆறுதல் தந்து கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரம் பேருந்தை இயக்கி வந்துள்ளார்.
பேருந்தில் இருந்த பயணிகளை காப்பாற்றியது மட்டுமின்றி, தக்க நேரத்தில் பேருந்து ஓட்டுனரை மருத்துவமனையில் அனுமதிக்கவும் காரணமாகி இருக்கிறார்.
தனக்கு கார் ஓட்ட தெரிந்ததால், பேருந்தை ஓட்ட சம்மதித்ததாகவும், பேருந்து ஓட்டுனருக்கு சிகிச்சை அளிப்பதும், குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்றுவதும் முக்கிய பணி என்பதை உணர்ந்ததாலும், தான் பேருந்தை இயக்கியதாக சொல்கிறார் யோகிதா.
இக்கட்டான சூழலில், தைரியமாக பேருந்தை இயக்க வந்த யோகிதாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கூடவே இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.