திருவாரூர்- காரைக்குடி இடையே டெமு விரைவு ரயிலின் பயண நேரம் 7 மணி நேரத்திலிருந்து 4.45 மணி நேரமாக ஜன.26-ம் தேதி முதல் குறைக்கப்பட உள்ளது.
திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதையில் மொபைல் கேட் கீப்பர்களுடன் முதலாவது டெமு ரயில் திருவாரூரிலிருந்து காரைக்குடிக்கு 1.6.2019 முதல் இயக்கப்பட்டது. 149 கி.மீ தொலைவுள்ள இந்த தடத்தில் 20 ரயில் நிலையங்களும் 73 ரயில்வே கேட்டுகளும் உள்ளன.
இந்த ரயில்வே கேட்டுகளுக்கு கேட்மேன்கள் நியமிக்கப்படாததால், ரயிலிலேயே மொபைல் கேட் கீப்பர்கள் செல்வார்கள். அவர்கள் அனைத்து கேட்டுகளிலும் ரயிலில் இருந்து இறங்கி கேட்டுகளை மூடிவிட்டு, ரயில் கடந்த பிறகு கேட்டை திறந்து விடுவார்கள்.
இதன் காரணமாக 149 கி.மீ தொலைவை ரயில் கடக்க 7 மணிநேரம் ஆனது. இதனால், இந்த ரயிலில் பயணம் செய்ய அதிகமான பயணிகள் விரும்பவில்லை.
இந்நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக 21.3.2020 முதல் இந்த ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. பின்னர், முன்பதிவில்லா சிறப்பு விரைவு டெமு ரயில் 4.8.2021 முதல் இயங்கி வருகிறது.
தற்சமயம், திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வரை உள்ள 40 கேட்டுகளுக்கு நிரந்தர பணியாளர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரயில்வே நிர்வாகத்தால் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, ஜன.26-ம் தேதி முதல் திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வரை பயண நேரம் குறைக்கப்படுகிறது.
புதிய கால அட்டவணைப்படி, திருவாரூரில் காலை 8.15 மணிக்கு புறப்படும் ரயில் காலை 10 மணிக்கு பட்டுக்கோட்டைக்கும், பிற்பகல் 1 மணிக்கு காரைக்குடிக்கும் சென்றடைகிறது.
பின்னர், பிற்பகல் 3 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும் ரயில், பட்டுக்கோட்டைக்கு மாலை 5.34 மணிக்கும், திருவாரூருக்கு இரவு 7.45 மணிக்கும் சென்றடைகிறது.
இதன் மூலம் ரயிலின் பயண நேரம் 7 மணியில் இருந்து 4.45 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் பராமரிப்புப் பணிகளுக்காக செல்வதால் இயங்காது.
மேலும், பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடி வரையுள்ள 25 கேட்டுகளுக்கு கேட்மேன்கள் நியமனம் செய்யப்பட்ட பின், திருவாரூரில் இருந்து காரைக் குடிக்கு பயணிகள் ரயில் 3.30 மணி நேரத்தில் செல்ல வாய்ப்புள்ளது.