விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் மற்றும் ஒன்றியத்தைச் சேர்ந்த சிந்தாமணி என்ற கிராமம் உள்ளது.
ஊரின் வயல்வெளிகள் சூழ இயற்கையான சூழலில் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுச் சுவர், ராஜகோபுரம் ஏதுமில்லை என்றாலும், விசாலமான இடத்தில் ஆலயம் உள்ளது.
இந்த கோயிலைப் பற்றி ஆய்வுசெய்த தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ் கூறும் தகவல்கள் ஆச்சர்யமூட்டுகின்றன.
“இது சோழர் கால அழகான சிறப்புமிக்க நேர்த்தி மிக்க கோயிலாக உள்ளது. இந்தக் கோயில் முதலாம் குலோத்துங்கச் சோழனின் மகன் விக்கிரம சோழனின் முதலாவது ஆட்சிக்காலத்தில் கிபி 1119 ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு, சிறப்பான கல்வெட்டுகள் உள்ளன.
இங்குள்ள கல்வெட்டில் ராஜராஜ சோழ வள நாட்டில் தீன சிந்தாமணி நல்லூர் என்று அக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. அந்த சிந்தாமணி கிராமம் தான் இந்த சிந்தாமணி கிராமம் என அழைக்கப்படுகிறது.
தாயின் பெயரில் சிந்தாமணி என்றும் தந்தையின் பெயரில் குலோத்துங்கச் சோழ ஈஸ்வரனுடைய கோயில் ஒன்றும் கட்டியுள்ளார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் சிற்பங்களுக்கு சிறப்புமிக்க கோயிலாக இந்த வைத்தீஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இங்குள்ள அனைத்து சிற்பங்களும் உலோகத்தாலானதுபோல் காட்சி அளிக்கின்றன.
அந்த அளவுக்கு நேர்த்தியாக இங்குள்ள சிற்பங்கள் உள்ளன. மிகவும் அரிய வகை சிற்பங்களாக ஊர்த்துவ தாண்டவமூர்த்தி, விநாயகர், பிட்சாட்ணர் மூர்த்தி சிற்பங்கள் உள்ளன.
இந்த சிற்பம் அனைத்தும் பார்ப்பதற்கு நேர்த்தியாகவும், அதன் வடிவமைப்பும் மிக சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது. அதிலும் தனித்துவமாக ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியான சிவனின் வடிவமைப்புதான், மிக சிறப்பான சிற்பங்களில் ஒன்றாக திகழ்கிறது.
ஜடா மகுடம் சூடி பக்கவாட்டு முடிச்சுகளுடன் எட்டு கரங்களைக் கொண்டு , ஒரு காலை தூக்கி நடனமாடுவது போல் காட்சி அளிப்பது அரிதான ஒன்றாகும்” என்று சிறப்புகளை விவரித்தார் தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ்.
மேலும் இந்த அரிதான சிற்பங்களை தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாக்க வேண்டும்” என சில சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.