இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி
-> K.V. பாலசுப்பிரமணியன்
இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று கொல்கொத்தாவில் நடைபெற்றது. வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. கே.எல்.ராகுல் தசைப் பிடிப்பு காரணமாக இந்த டி20 மூன்று போட்டிகளிலும் விளையாட மாட்டார். எனவே இப்போட்டியில் சுழல் பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் விளையாடினார். இது அவருக்கு முதல் டி20 போட்டி.
பூவாதலையா வென்ற இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணியை மட்டையாடச் சொன்னது. அந்த அணியின் கைல் மேயர்ஸ் (24 பந்துகளில் 31 ரன், 7 பவுண்டரிகள்), நிகோலஸ் பூரன் (43 பந்துகளில் 61 ரன், 4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்), கைரன் பொலார்ட் (19 பந்துகளில் 24 ரன் 2 பவுண்டரிகள், ஒரு சிக்சர்) சிறப்பாக ஆடினர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 7.85 ரன்ரேட்டுடன் ஏழு விக்கட் இழப்பிற்கு 157 ரன் எடுத்தது.
அடுத்து விளையாட வந்த இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடத் தொடங்கினார். அவர் 19 பந்துகளில் 40 ரன் அடித்தார். அதில் 4 பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள். அவரோடு இணைந்து ஆடிய இஷான் கிஷன் 42 பந்துகளில் 35 ரன் எடுத்தார். விராட் கோலி (13 பந்துகளில் 17 ரன்) சரியாக ஆடவில்லை. ரிஷப் பந்தும் சரியாக ஆடவில்லை.
அதன் பின் விளையாட வந்த சூர்யகுமார் யாதவ் (18 பந்துகளில் 34 ரன், 5 ஃபோர், 1 சிக்ஸ்), வெங்கடேஷ் ஐயர் (13 பந்துகளில் 24 ரன், 2 ஃபோர், 1 சிக்ஸ்) எடுத்து ஏழு பந்து மீதமிருக்கையில் இந்தியாவிற்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
ரவி பிஷ்னோய் 4 ஓவர் பந்து வீசி 17 ரன் கொடுத்து 2 விக்கட் எடுத்ததால் இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகனாக் அறிவிக்கப்பட்டார்.