ஒவ்வொரு வருடமும் வரும் மகா சிவராத்திரி தினத்தன்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதன்படி இந்த ஆண்டு வருகிற மார்ச் 1-ந் தேதி மகா சிவராத்திரி வருகிறது.
மகா சிவராத்திரி, பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு வரும் பிப் 28ம் தேதி முதல் மார்ச் 3-ந் தேதி வரை சதுரகிரிக்கு செல்ல கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வேண்டும். பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்க அனுமதி இல்லை. மலையேறும் பக்தர்கள் அங்குள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்ற காரணத்தால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலை அடிவாரம் மற்றும் கோவில் பகுதியில் செய்யப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு இரவுமுழுவதும் ஐந்து கால அபிஷேகம் பூஜை வழிபாடு நடைபெறுகிறது.
ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே
தானிப்பாறை க்கு மேற்கே உயரமான மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் மலைக்கு செல்ல மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
