அதிமுகவில் மீண்டும் வி.கே.சசிகலாவா? விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை:

Published:


வி.கே. சசிகலா, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக  இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வந்து கார் மூலம் நெல்லை கே.டி.சி. நகர் வந்தார்.

அங்கு அவருக்கு ஏராளமான தொண்டர்கள் கூடி உற்சாக வரவேற்பு வழங்கினர். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் சசிகலா அங்கிருந்து புறப்பட்டு நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் வழியாக விஜயாபதி கிராமம் சென்று அங்கு உள்ள பழம் பெருமை வாய்ந்த விசுவாமித்திரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பின்னர் அங்கிருந்து கார் மூலம் உவரி வழியாக திருச்செந்தூர் சென்றார். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த அவர் இன்று இரவு திருச்செந்தூரில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.

நாளை காலை திருச்செந்தூரில் இருந்து காரில் புறப்பட்டு ஸ்ரீவைகுண்டம் வழியாக நெல்லை கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை பகுதிக்கு வருகிறார். அங்கு கூடியிருக்கும் திரளான தொண்டர்கள் கொடுக்கும் வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார்.

பின்னர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். அங்கிருந்து ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக இலஞ்சி குமாரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் பாபநாசம் மலைப்பகுதிக்கு சென்று அகத்தியர் பாதம் பதித்த இடத்தில் உள்ள அகத்தியர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபிறகு கடையநல்லூர், சிவகிரி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

இன்று விமான நிலையத்தில் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியபோது தொடர் தோல்விகளை சந்தித்ததால் அதிமுகவினர் துயரத்தில் உள்ளனர். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம் போன்றவர்கள். குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை பார்க்கச்செல்கிறேன். தொண்டர்கள் என்னை நிச்சயம் சந்திப்பார்கள் என்றார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வமே தலைமை தாங்கினார். தேனி மாவட்டத்தை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வத்திடம் வலியுறுத்தினார்கள்.

இது தொடர்பாக கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றி ஓ.பன்னீர் செல்வத்திடம் கொடுத்தனர்.

இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பதே கட்சி தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. என்றும் அதற்கான ஏற்பாடுகளை தானே முன்னின்று செய்து வருவதாக கூறினார்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

இது சேலத்தில் இருந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வந்ததும் நேற்று கடும் எரிச்சல் அடைந்தார். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை தக்க வைக்கும் நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைவர் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சசிகலா பிரச்சினை தேவை தானா என்று ஆவேசம் அடைந்ததாக கூறப்படுகிறது

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மூலமும் ஓ.பன்னீர் செல்வத்திடம் பேச வைத்தார். எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர் செல்வத்திடம் போனில் பேசியதாக தெரிகிறது.சசிகலாவை கட்சியில் சேர்க்கும் பிரச்சினையை இப்போது ஏன் பேச வேண்டும். பல மாவட்டங்களில் சசிகலாவை சேர்க்க வேண்டாம் என்று கூறி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். எனவே இப்போது சசிகலா தொடர்பாக எதுவும் பேச வேண்டாம் என கூறியதாக தெரிகிறது.

எடப்பாடி சொன்னதை கேட்ட ஓ.பன்னீர்செல்வம் அதன் பிறகு அமைதியாகி  பெரிய குளத்தில் நாளை நடைபெற இருந்த அ.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தையும் ரத்து செய்து விட்டார்.

எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் தங்கமணி நேரில் பார்த்தும் பேசினார். இதேபோல் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

சசிகலாவை சேர்க்க பல மாவட்டங்களிலும் எதிர்ப்பு கிளம்பியதால் ஓ.பன்னீர் செல்வம் தற்போது அமைதியாகி விட்டார்.

இதுபற்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இணைந்து கட்சியை நடத்தும்போது எதற்கு சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று எதிர்கேள்வி எழுப்பினர்.

ஒற்றைத் தலைமை வந்தால்தான் அ.தி.மு.க. கட்சிக்கு நல்லது. அதற்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ். இருவரில் யாராவது விட்டு கொடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி போனில் பேசியதால் அவர் சமரசம் அடைந்து விட்டதாகவும் சசிகலா பிரச்சினை இனி விஸ்வரூபம் எடுக்காது என்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர் .

202203040904522412 AIADMK volunteers are all one family Sasikala interview SECVPF - 2026


Related articles

Recent articles

spot_img