மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுர பகுதியில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் சேதம் அடைந்தன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு ராஜ கோபுர பகுதியில் இருந்து இரவு 10:30 மணி அளவில் புகை வெளியேறியது. இரவு நடை அடைத்து புறப்பட தயாராக இருந்த ஊழியர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கிழக்கு ராஜகோபுரத்தில் இருந்து சுவாமி சந்நிதிக்குச் செல்லும் வழியில் ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள கடைகளில் தீப்பிடித்தது தெரிந்தது. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. ஆனால், தண்ணீர் பற்றாக்குறையால் பணியில் தொய்வு ஏற்பட்டது.
தீயால் கட்டட சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. மேற்கூரை பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்தன. அங்கிருந்த பொது மக்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகியும் தீயை அணைக்க முடியவில்லை.
ஆயிரம் கால் மண்டம் அருகே இருந்த 17ஆம் நுாற்றாண்டை சேர்ந்த கதவு அதிர்ஷ்டவசமாக தீயில் தப்பியது. பின்னர் நேற்று நள்ளிரவு தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
இந்நிலையில், இன்று காலை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தீவிபத்து ஏற்பட்ட கிழக்கு கோபுர நுழைவு வாயில் தவிர பிற வாயில்கள் வழியே பக்தர்கள் அனுமதிக்கப் பட்டு வருகின்றனர். மீனாட்சி அம்மன் கோயிலில் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.