பெரம்பூர் அருகே எம்.கே.பி.நகர் 12வது மத்திய குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(44). ஆட்டோ டிரைவரான இவரிடம் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தமிழ்(30), குடிபோதையில் வந்து, `என்னுடைய மனைவி குளோரி என்னை விட்டுப்பிரிந்து சென்றதற்கு நீ தான் காரணம்’ என்று சண்டைபோட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இதனை தடுக்க வந்த பிரேம்குமாரின் மனைவி ஸ்வேதாவை தாக்கி கீழே தள்ளியுள்ளார். சிறிது நேரத்தில் பிரேம்குமாரின் காதை கடித்து துப்பியுள்ளார். இதில் பிரேம்குமார் காதில் ஒரு பகுதி துண்டானது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக பிரேம்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேம்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


