தெலுங்கில்: பி,எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
‘தாள வ்ருக்ஷச்சாயா ந்யாய:’
பனைமரத்தின் நிழல் போல…
தாள வ்ருக்ஷ: – பனைமரம். சாயா – நிழல்.
பனை மரம் பிற மரங்களை விட மிக உயரமாக இருக்கும். ஆனால் வழிப் பயணத்தில் சோர்வு நீங்கி ஓயவெடுப்பதற்கோ, வெயில் மழையிலிருந்து காத்துக் கொள்வதற்கோ பயன்படாது. 32-50 அடி, இன்னும் சில பிரதேசங்களில் 90 அடி கூட வளரும். ஆனால் என்ன பயன்? அதன் நிழல் சிறியது.
இந்த நியாயத்தில் பனைமரத்தின் நிழல் பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளது. அரச மரம், ஆல மரம் போன்ற விருட்சங்கள் அத்தனை உயரம் வளராவிட்டாலும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் நிழல் தருவதோடு மேலும் பல விதங்களில் பயன்படும்.
அதேபோல் சமுதாயத்தில் சில மனிதர்கள் உயர் பதவி வகித்தாலும் தனிப்பட்ட முறையில் செல்வந்தராக இருந்தாலும் பிறருக்கோ சமுதாயத்திற்கோ எவ்விதத்திலும் பயன்பட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை ‘தாளவ்ருக்ஷச்சாயா’ நியாயத்தோடு ஒப்பிடுவர்.
‘எத்தனை செல்வம் சேர்த்து என்ன பயன்? பிறருக்கு உதவுவதற்கு தானம் செய்யும் குணம் இருக்க வேண்டுமே!’ என்ற செய்தியை அளிக்கிறது ‘தாள வ்ருக்ஷச்சாயா’ நியாயம்.
சில போலி மேதாவிகள் தமக்குத் தாமே உயர்ந்தவர்கள் என்று எண்ணிக் கொள்வார்கள். வீண் பேச்சு பேசித் திரிவார்கள். பல்கலைக்கழகங்களில் ப்ரொபசர்களாக சம்பளம் பெறுவார்கள். சமுதாயத்திற்கு எதுவும் உதவ மாட்டார்கள். ஆனால் பிறரிடையே பகை மூட்டிக் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு சேவை நிகழ்ச்சியிலும் பங்கு கொள்ள மாட்டார்கள்.
மக்களின் அறியாமை இவர்களுக்கு மூலதனம். ஏழைகளை எப்போதும் ஏழைகளாகவே இருக்கவைப்பது இவர்களின் நோக்கம். நற்செயல்களை கடைபிடிப்பது இவர்களிடம் தென்படாது. எத்தனை உயரம் வளர்ந்தாலும் ஒரு சிலருக்காவது நிழல்தந்து பயனளிக்காத பனைமரம் போன்றவர்கள் இவர்கள். இவர்களையே வறண்ட அறிஞர்கள் என்பர். பெரும்பேச்சுகள் பேசுவர்கள். கேட்பவர்களுக்கு எதுவும் புரியாது. இத்தகைய இடதுசாரிகள் இந்த ‘தாள வ்ருக்ஷச்சாயா’ நியாயத்திற்கு சரியான உதாரணங்கள்.
(ஆர்எஸ்எஸ்., இரண்டாவது சர் சங்க சாலக்) ஸ்ரீகுருஜி, தான் எதிர்கொண்ட ஒருவரைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்… தன்னைப் பற்றி உயர்வாக கூறிக் கொண்ட அந்த மனிதர், தன்னை அனைவரோடும் சேர்ந்து பழகும் குணத்தில் தேர்ந்தவராக அறிமுகம் செய்து கொண்டார். அதுமட்டுமல்ல. ‘டாக்டர்ஜிக்கு (சங்க ஸ்தாபகர்) உயர்ந்த யோசனைகளை அளித்தது நானே!’ என்றும் கூறிக் கொண்டார். ‘உங்களுக்கு இந்த ஊரில் நல்ல நண்பர் எத்தனை பேர்?’ என்று கேட்ட போது, “என் ஸ்தாயி உள்ளவர், எனக்கு நண்பராக இருக்கத் தகுந்தவர் இந்த ஊரில் யாரும் இல்லை’ என்று பதிலளித்தார். குருஜி நகைச்சுவையாகக் கூறினார், ‘குறைந்தபட்சம் நான்கு பேரையாவது நட்பாக்கிக் கொள்ளுங்கள். கடைசியில் தேவைப்படுவார்கள்’.
செல்வந்தர் பலர் இருப்பர். அவர்களில் கொடையாளிகள் எத்தனை பேர் இருப்பார்கள்? பிறருக்குக் கொடுத்துதவும் குணம் எத்தனை பேருக்கு உள்ளது? வாங்கிக் கொன்வதைத் தவிர கொடுத்து அறியாதவர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள் என்று கூறும் இந்தக் கதை அனைவரும் அறிந்ததே…
ஒரு ஊரில் பெரிய மனிதர் ஒருவர் பள்ளத்தில் விழுந்துவிட்டாராம். உதவிக்காக கூக்குரலிட்டபோது ஒருவர் உதவ முன் வந்து, “உங்கள் கையைக் கொடுங்கள்… மேலே தூக்கி விடுகிறேன்” என்றாராம்.
அந்தப் பெரிய மனிதர் கை கொடுப்பதற்கு இணங்கவில்லை.
“சரி உங்கள் கையை கொடுக்க வேண்டாம். என் கையை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றவுடன் உடனே இணங்கினாராம். கொடுப்பதற்கு மனம் வர வேண்டுமல்லவா?
ஒரு நாள் சேவாபாரதி அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார். மதியான நேரம். அவருக்கு ஒரு கால் செயற்கை கட்டையால் ஆனது. நொண்டிக்கொண்டே வந்தார். ஏதாவது உதவிக்காக வந்திருப்பார் என்று எண்ணினேன். அவர் தன் பையில் எடுத்துவந்த நாணயங்களை குவியலாகக் கொட்டினார். சில ஆயிரம் ரூபாய்கள். அவர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்து இவ்வாறு நன்கொடை அளிப்பாராம்.
அந்த வள்ளல் ஒரு கோவிலில் செருப்பு ஸ்டாண்ட் வைத்திருப்பவர். பக்தர்கள் அளிக்கும் சில்லறைகளை பொது நல சேவைக்காக சமர்ப்பிப்பது அவர் வழக்கமாம். ‘கோவிலில் பிரசாதம் சாப்பிடுவேன் அங்கேயே படுத்து தூங்குவேன். நான் தனி ஆள். என் வருமானம் சமுதாயத்திற்கு பயன்படட்டுமே!” என்றார் அந்த பண்பாளர்.
‘கொடுப்பதில் உள்ள சுகம் வேறெதிலும் கிடைக்காது’ என்று கவி ஆருத்ரா ஒரு பாடல் இயற்றி உள்ளார்.
எத்தனை பணக்காரராக இருந்தாலும் பிறருக்கு உதவாதவரை ‘தாளவ்ருக்ஷச்சாயா’ நியாயத்தோடு ஒப்பிடுவர்.
—-0o0—-