கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை-செங்கோட்டை முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் 2ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் இயக்கப்படுகிறது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து சங்கரன்கோவில்,ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி,திருத்தங்கல் .மதுரை,செல்லும் மாணவர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், கூலித்தொழிலாளர்கள்,அரசு ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருந்த செங்கோட்டை -மதுரை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து மதுரை-செங்கோட்டைக்கு முன்பதிவு இல்லாத பயணிகள் சிறப்பு ரயிலாக இயக்க மதுரை கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.இதன்படி கடந்த 2021 ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் மதுரை-செங்கோட்டை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயங்க தொடங்கியது. காலை 7.10 மணிக்கு மதுரையில் புறப்படும் இந்த ரயில் காலை 10.35 மணிக்கு செங்கோட்டையை வந்தடையுமாறு இயக்கப்பட்டு மீண்டும் செங்கோட்டையில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்பட்ட ரயில் இரவு 7.10 மணிக்கு மதுரைசென்றடையும் வண்ணம் இயக்கப்பட்டது.
இந்த நிலையில் செங்கோட்டையிலிருந்து மதுரைக்கு ரயில் இயக்க தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப் பட்டதைத் தொடர்ந்து செங்கோட்டையிலிருந்து 14 பெட்டிகளோடு செங்கோட்டை -மதுரை பயணிகள் சிறப்பு ரயில் இயக்கம் 2020 ஆம் ஆண்டு மார்ச்க்குப்பின்னர் இன்று இயக்கம் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து இந்த ரயிலில் பயணிக்கும் செங்கோட்டை-மதுரை சீசன் பயணச்சீட்டு பயணிகள் சங்கத்தின் தலைவர் செல்வராஜ், செயலாளர் ராமையா. பொருளாளர் முருகன், துணைச்செயலாளர். கனேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பில் ரயில் ஓட்டுனர்களுக்கு பொன்னாடைபோர்த்தி பயணிகளுக்கு இனிப்பு வழங்கி தங்களது பயணத்தை தொடங்கினர். ஏராளமான பயணிகள் இந்த ரயிலில் பயணத்தை தொடங்கினர்.
முன்னதாக, செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கத்தின் மூலம், செங்கோட்டை – திருநெல்வேலி ரயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலைக்கு செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பில் அதன் செயலர் கே.ஹெச். கிருஷ்ணன் கடிதம் எழுதியிருந்தார். அதில்,
**கொரோனா தொற்றுக்கு முன் தினசரி செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்கு நான்கு பாசஞ்சர் ரயில்களும் ( 06.50,10.15,14.40,17.50 மணிக்கு)
திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டைக்கு நான்கு பாசஞ்சர் ரயில்களும் (07.00,09.20,13.50,18.25 மணிக்கு) இயக்கப்பட்டு நல்ல வருவாயையும் ஈட்டின.
பிறகு கொரோனா தொற்று பாதிப்பால் இந்த ரயிலகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
செங்கோட்டை – திருநெல்வேலி , திருநெல்வேலி- செங்கோட்டை வழித்தடங்களில் ஓடிய இந்த ரயில்கள் மாணவர்கள் வணிகர்கள் அரசு வங்கிகள்,தனியார் அலுவலக ஊழியர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் பேருதவியாக இருந்தன.பேரூந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் ரயில்களில் பயணிப்பதையே விரும்புகின்றனர்.
கொரோனா தொற்று சற்று குறைந்த பிறகு ,தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட அதிகாரிகள் நவம்பர் 2021 முதல் காலை 7 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு செங்கோட்டைக்கு காலை 9.15க்கு வந்து சேரும் முன்பதிவில்லா விரைவு ரயிலை இயக்குகிறார்கள். இதே ரயில் மாலை வரை செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் மாலை 05.50க்கு செங்கோட்டையில் புறப்பட்டு இரவு 08.10க்கு திருநெல்வேலிக்கு போய் சேருகிறது.இந்த ஒரே ஒரு ரயில் மட்டும் இயக்கப்படுவது பொதுமக்களின் அனைத்து ரயில் தேவைகளுக்கும் போதுமானதாக இல்லை.
எனவே தாங்கள் தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் செங்கோட்டை – திருநெல்வேலி இடையே ஒரு காலை நேர ரயிலும் திருநெல்வேலி – செங்கோட்டை இடையே ஒரு மாலை நேர ரயிலும் விரைவில் இயக்கிட வேண்டுகோள் வைத்து அதற்கான ஆணையையும் பெற்று தருமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்… என்று குறிப்பிட்டுள்ளார்.