நாகபட்டிணம் அருகே திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவின்போது, தேரின் சக்கரம் ஏறியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தேருக்கு முட்டுக்கட்டை போட்டபோது இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவின்போது, தேரின் சக்கரம் நகர்ந்து செல்லும்போது அடுத்தடுத்து முட்டுக்கட்டை போட்டபடியே இழுத்து செல்லப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தேர் புறப்பட்டு இரண்டு மணிநேரத்திற்கு பின்பு முட்டுக்கட்டை போடப்பட்டபோது, தீபராஜன் என்ற இளைஞர் மீது தேரின் சக்கரம் ஏறியது. இந்த சம்பவத்தில் காயமடைந்த தொழிலாளியான தீபராஜன் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அதில் பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.
தஞ்சை அருகே களிமேட்டில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் நாகை அருகே மற்றொரு சம்பவம் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இந்த கோவில் திருவிழாவில் அருகேயுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

