விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
சாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டி கிராமத்தில் சிவகாசி சிவகாமிபுரம் பகுதியில் பெரியகருப்பன் (57) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலை டி.ஆர்.ஓ. உரிமம் பெற்று 5 அறைகளில் 20 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு சக்கரம் உள்ளிட்ட சிறியரக பட்டாசு வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
குடும்பன்பட்டியைச் சேர்ந்த சோலை குருசாமி என்பவரது மகன் சோலை விக்னேஸ்வரன் ( 25) இன்று காலை ஒரு அறையில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் அந்த அறை தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கிய வாலிபர் சோலை விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சாத்தூர் தீயணைப்பு அலுவலர் கதிரேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த வெடி விபத்து தொடர்பாக அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் இப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


