ஸ்மார்ட்போன் வருகைக்குப் பிறகு செயலிகளின் பயன்பாடு அதிகரித்தது. உணவை ஆர்டர் செய்வது முதல், பணப் பரிவர்த்தனை வரை பல சேவைகளை நாம் செயலிகளில் இருந்தே இன்று பெற முடியும்.
வசதிகள் இருக்கிற அதே வேளையில் பிரச்னைகளும் இருக்கதான் செய்யும். வைரஸ் தாக்குதலுக்கு ஆளான 3 ஆண்ட்ராய்டு செயலிகளுக்கு கூகுள் தடை விதித்துள்ளது.
இந்த மூன்று செயலிகள் உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் நிறுவியிருந்தால் அவற்றை உடனடியாக நீக்கிவிடுங்கள்.
ஸ்டைல் மெசேஜ், பிளட் பிரெஷர் ஆப், கேமரா பிடிஎஃப் ஸ்கேனர் ஆகிய மூன்று செயலிகளும் ஜோக்கர் எனப்படும் வைரஸின் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தது.
இந்தச் செயலிகளைப் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்களின் கைபேசிக்குள் நுழைந்து சந்தா சேவைகளில் தாமாகவே பதிவு செய்து பயனர்களின் பணத்தையும் ஹேக்கர்கள் எடுத்து விடுகின்றனர்.
இந்தச் செயலிகளை காஸ்பர்ஸ்கி கண்டறிந்தது. இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட இகோர் கோலோவின் கூறுகையில், கூகுள் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஜோக்கர் வைரஸ் மீறிச் சென்றுவிட்டது.
கூகுள் பிளே ஸ்டோரில் செயலிகள் பதிவேற்றப்பட்ட பிறகு தான் இந்த வகை வைரஸ் ஆக்டிவ் ஆகின்றன என்றார்.
இதுகுறித்து கூகுள் பிளே ஸ்டோருக்கு தகவல் அனுப்பிய பிறகு, கூகுள் நிர்வாகம் சம்பந்தப்பட்ட செயலிகளை நீக்கியது. வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மேலும் சில செயலிகளையும் கூகுள் நிர்வாகம் கண்டறிந்து நீக்கியது.
அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களிலிருந்து செயலிகளை பதிவிறக்காமல் தவிர்ப்பதே வைரஸ் தாக்குதலில் இருந்து நமது சாதனத்தை பாதுகாக்கும் ஒரே வழி.
அதேபோல், மேலதிக அனுமதிகளையும் செயலிகளுக்கு நீங்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்பது தொழில்நுட்ப நிபுணர்களின் ஆலோசனையாக உள்ளது.