மலையேறும் போது வானத்தில் ஒரு இருண்ட உருவத்தை கண்டதாகவும், அது பேய் என நினைத்ததாகவும் மலையேற்றித்திற்கு சென்ற நபர் பகிர்ந்த சம்பவம், அதன் பின்னால் உள்ள இயற்கை நிகழ்வு காரணமாக இணையத்தில் முக்கியத்துவமானதாக மாறியுள்ளது.
வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள லேக் மாவட்டத்தில் அமைந்துள்ள கிரேட் எண்ட் மலைப்பகுதிக்கு 39 வயதான தாமஸ் ஸ்வாலோ என்பவர் தனது நண்பர்களுடன் மலையேற்றத்திற்கு சென்றுள்ளார்.
நவம்பர் 13 ஆம் தேதி நண்பர்களுடன் மலைப்பகுதியில் 40 கிலோ மீட்டர் உயரத்தில் ஏறிக்கொண்டிருந்த போது, அப்போது அவர் வானத்தில் வித்தியாசமான ஒளியை கண்டதாகவும், அதனை பேய் என நினைத்ததாகவும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அன்றைய தினம் வானம் மேகமூட்டத்துடன் இருந்துள்ளது. அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்த மேகத்தை ரசித்துக் கொண்டிருந்த தாமஸ், திடீரென வானத்தில் பிரகாசமான ஒளிக்கு நடுவே ஒரு கருப்பு உருவம் தோன்றியதைக் கண்டு அரண்டு போயுள்ளார்.
தலைக்குப் பின்னால் ஒளிவட்டத்துடன் ஒரு உருவம் வானத்தில் மிதந்து கொண்டு இருப்பதைக் கண்ட அவர், முதலில் அதனை பேய் என நினைத்து திடுக்கிட்டுள்ளார்.
இல்லையேல் அது வானத்தில் மிதக்கும் கடவுளின் உருவமாக கூட இருக்கலாம் என ஆன்மீக ரீதியாகவும் எண்ணினார்.
ஆனால் அவர் பார்த்தது உண்மையில் பேய் கிடையாது. எல்லாம் மாயை என்பது போல், தாமஸ் ஸ்வாலோ பார்த்தது ஒரு ஒளியியல் மாயை, அது ப்ரோக்கன் ஸ்பெக்டர் அல்லது ப்ரோக்கன் வில் என அழைக்கப்படுகிறது.
அதாவது இந்த விளைவு மூலமாக, தாமஸ் ஸ்வாலோவின் நிழல் தான் அருகே இருந்த மூடுபனி மீது விழுந்துள்ளது தெரியவந்துள்ளது.
ப்ரோக்கன் ஸ்பெக்டர் என்ற சொல் 1780 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் உருவானது. இந்த நிகழ்வு முதன் முதலில் கண்டறியப்பட்ட மலையின் பெயராகும்.
ஹார்ஸ் மலைகளில் உள்ள மிக உயரமான சிகரமான ப்ரோக்கன் பெரும்பாலும் மேகம் அல்லது மூடுபனியால் போர்த்தப்பட்டிருக்கும் அழகிய மலைப்பகுதியாகும்.
இதுகுறித்து தாமஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “நான் கொஞ்சம் திடுக்கிட்டேன். இது மிகவும் அழகாக இருந்தது. ஆனால் ஒரு உருவம் வானத்தில் இருந்து மிதப்பது போல் தெரிந்தது, எனக்கு பார்க்க ஆன்மீக ரீதியான எண்ணத்தை கொடுத்தது. அந்த உணர்வு மிகவும் வித்தியாசமானது, யதார்த்தமானது மற்றும் மிகவும் அழகானது. நான் உச்சி மலையின் மீது இருந்து ஒரு பள்ளத்தாக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு பின்னால் இருந்த சூரியன் மிகவும் பிரகாசமாக ஒளிவீசிக்கொண்டிருந்தது” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் மற்றும் அவர் வெளியிட்டுள்ள தகவலை வைத்தே தாமஸ் பார்த்து பயந்து போன உருவம் பேய் கிடையாது, அது ப்ரோக்கன் ஸ்பெக்டர் விளைவு காரணமாக சிகரத்தின் மீது விழுந்த அவருடைய நிழல் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.