ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் 13 நாட்கள் உண்டியல் பணம் எண்ணப்பட்டதில் காணிக்கையாக 1.34 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வருவாய் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாதத்தில் 2.99 கோடி ரூபாய் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமிகள் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில், நம்புநாயகி அம்மன் கோவில், ராமர் தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் மூலம் செலுத்தப்பட்ட காணிக்கைகளை கோவில் பணியாளர்கள் மூலம் கைப்பற்றி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
இக்கோயிலில் மாதந்தோறும் உண்டியல் வருவாய் எண்ணப்படுவது வழக்கம். ஆனால் நடப்பு மாதம் கோயில் நிர்வாகம் மூலம் பக்தர்களின் காணிக்கை பெறுவதில் முறைபடுத்துதல் போன்ற பணிகள் காரணமாக உண்டியல் வருவாய் அதிகரித்துள்ளது.
இந்த மாதம் கடந்த 11 ஆம் தேதி உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ 1 கோடியே 65 லட்சத்து 29 ஆயிரத்து 704 ரூபாயும்,தங்கம் 104 கிராம், வெள்ளி 2 கிலோ 835 கிராம் பக்தர்கள் காணிக்கை மூலம் கிடைக்கப்பெற்றது.
அதே போல கடந்த 24 ஆம் தேதி இரண்டாவது முறையாக 13 நாட்கள் கழித்து உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ 1 கோடியே 34 லட்சத்து,47 ஆயிரத்து 439 ரூபாய், தங்கம் 116 கிராம்,வெள்ளி ஒரு கிலோ 560 கிராம் கிடைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்.
ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வருவாய் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாதத்தில் ரூ 2 கோடியே,99 லட்சத்து 77 ஆயிரத்து 143 ரூபாயும், தங்கம் 220 கிராம், வெள்ளி 4 கிலோ 395 கிராம் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.