spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்பிரதமரின் சீரிய சிந்தனை; முதல்வரின் சிறிய சிந்தனை! - அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை!

பிரதமரின் சீரிய சிந்தனை; முதல்வரின் சிறிய சிந்தனை! – அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை!

- Advertisement -
annamalai pressmeet

பாரதப் பிரதமரின் பண்பாடும் சீரிய சிந்தனையும், மாநில முதல்வரின் பக்குவமற்ற சிறிய சிந்தனையும் – என்ற தலைப்பில் பாஜக., தமிழ் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது…

நமது பாரதத் தாயின் தவப்புதல்வன் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை தமிழக மண்ணில் வரவேற்றதில் பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பாக வரவேற்றதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. 31,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கியதில் நமது மாநில முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் மகிழ்ந்திருப்பார் என்று நம்புகிறோம்.

இது தமிழகத்திற்கு நமது பாரதப் பிரதமர் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு வழங்கிய பல நலத்திட்டங்களில் ஒரு சிறு பகுதி மட்டுமே என்று சொன்னால் அது மிகையாகாது. நமது பாரதப் பிரதமர் தமிழர்களின் புகழை உலகம் அறியச் செய்தவர் என்பதை அறியாத பேதையாக உலா வருகிறார் நமது தமிழக முதல்வர்.

நேற்று நமது பாரத பிரதமரின் முன்னிலையில் தமிழக முதல்வர் ஆற்றிய உரையில் உள்ள குறையை சுட்டிக்காட்ட நாங்கள் கடமைப் பட்டுளோம்.

முதல்வர் தனது முன்னுரையில் தமிழக வளர்ச்சியானது பொருளாதாரத்தில் மட்டும் அல்ல, சமூக நீதி சிந்தனையையும் ஒருங்கிணைத்த வளர்ச்சி என்று அலங்காரமான மேடை வார்த்தைகளை உச்சரித்தார். ஆனால் உண்மை நிலை நமக்குத்தான் தெரியுமே!

திமுக., அமைச்சர் ராஜ கண்ணப்பன், ஓர் அதிகாரியை அவரது ஜாதியின் பெயரைச் சொல்லி திட்டியதற்கு, நீங்கள் வழங்கிய வெகுமதி, வெறும் துறை மாற்றம் மட்டுமே! மேலும், முதல்வரின் உறவினர், மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் TR பாலு, “நாங்கள் தீண்டத் தகாதவர்களா?” என்று கேட்ட பின்னர், நீங்கள் அவர்கள் மேல் எடுத்த நடவடிக்கை என்ன? என்பதை தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

உங்கள் தந்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள், திருமாவளவனை நோக்கி “நீங்கள் பொதுத் தொகுதிக்கெல்லாம் ஆசைப்படக் கூடாது” என்றாராம். இப்படி சந்தி சிரிக்கிறது உங்கள் வரலாறு. இவற்றையும் நமது முதல்வர், பிரதமரின் முன்னிலையில் குறிப்பிடத் தவறிவிட்டார்.

அங்கீகாரம் இல்லாத சமுதாயத்தைச் சேர்ந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணன் Lமுருகன் அவர்களுக்கு மூன்று துறைகளின் பொறுப்பைக் கொடுத்து மத்திய இணை அமைச்சராக உயர்த்தியவர் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். இதுதான் பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்கள் கண்ட கனவு. அதை இன்றைய காலகட்டத்தில் நடைமுறைப் படுத்தியவர் சமூக நீதிக் காவலர் மோடி அவர்கள்.

பொருளாதார வளர்ச்சியைப் பற்றிப் பேசும் நீங்கள், தமிழகம் ஏதோ 1967ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் வளர்ந்தது என்ற தோற்றத்தைக் கொடுப்பதுதான் திராவிட மாயை. ஐயா காமராஜர் காலத்திற்கு முன்பிலிருந்தே தமிழகத்தில் தொழில் துறை மேலோங்கி இருந்தது. அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை காமராஜருக்கே சேரும். திமுக செய்த ஒரே சாதனை, தொழில் வளர்ச்சியை சென்னையில் முடக்கியது மட்டும் தான்.

1952ஆம் ஆண்டு தொடங்கி, 1992ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த சரக்கு சமப்படுத்தல் கொள்கை (Freight Equalisation Policy) தமிழகத்திற்கு ஒரு வரப் பிரசாதமாக இருந்தது. தமிழகம் போன்ற மாநிலங்களில் உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் நம்மிடம் இல்லை. இதை வடமாநிலங்களில் இருந்து குறைந்த கட்டணச் செலவில் தமிழகத்தில் இறக்குமதி செய்வதற்கு உபயோகமாக இருந்தது இந்த சரக்கு சமப்படுத்தல் கொள்கை. இதனால் இன்று வளர்ந்த மாநிலங்கள் என்று நமது நாட்டில் சொல்லப்படும் அனைத்து மாநிலங்களும் பயன் பெற்றன. ஆனால் மூலப்பொருட்களை உற்பத்தி செய்த மாநிலங்கள் இழப்பை சந்தித்தன.

அவர்கள் அனைவரும் இந்தியா என்பது ஒரு நாடு, அனைவரும் நம் மக்கள், தென் இந்தியா வளர்வதால் அந்நிய நாட்டு அச்சுறுத்தல் இருக்காது என்பதை மனதில் கொண்டே அவர்களுக்கு நேர்ந்த இழப்பை ஏற்றுக் கொண்டனர். இன்று தமிழகத்தின் வளர்ச்சியில் நமது நாட்டின் வடமாநிலங்களின் பங்களிப்பும் இருந்துள்ளது என்பதை நமது தமிழக முதலவர் புரிந்து கொள்ளவேண்டும். அவருடன் இருக்கும் நிதி அமைச்சர், 30 ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்து அவர் வேலை செய்த வங்கி திவால் ஆன பிறகே தமிழகம் வந்ததால், அவருக்கு இந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று தமிழகத்தில் சுமார் 60 லட்சம் வேற்று மாநிலத்தவர்கள் பணி செய்து வருகிறார்கள். அவர்களை ஒதுக்கிவிட்டு தமிழகத்தில் தொழில் உற்பத்தி வளருமா என்பதை முதல்வர் முதலில் தொழில் முனைவோர்களிடம் பேசிப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இங்கு வாக்குரிமை இல்லாமல் இருக்கலாம்; ஆனால் நமது மாநிலத்தின் வளர்ச்சியில் ஒரு சிறு பங்காவது அவர்களுக்கும் உண்டு.

சமீபத்தில் 25,000 கோடி ரூபாய் Iphone உற்பத்திக்கான முதலீட்டை தமிழகத்திற்கு வர வழிவகை செய்தது மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டம் என்பது முதல்வருக்குத் தெரியும். ஆனால் தனது சிந்தையில் உதித்த திட்டம் போல் sticker ஒட்டியது மட்டுமேதான் இந்த அரசின் சாதனை.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த ஆண்டு வந்த வெளிநாட்டு முதலீடு தமிழகத்தை விட 6 மடங்கு அதிகம். இங்குள்ள திமுக.,வினர் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு முதலீடுகள் பறந்து வருகிறது என்ற போலியான தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். திமுக.,வினரால் KITEX என்ற நிறுவனத்தை சம்மதிக்க வைத்து இங்கு முதலீடு செய்ய முடியவில்லை, இங்கு இருக்கும் தொழில் நிறுவனங்கள் திமுக., வளர்த்து விட்ட போராளிகளால் இன்று மூடப்படுமா இல்லை நாளை மூடப்படுமா என்ற நிலையை நோக்கியே நகர்ந்து வருகிறது.

தொழில் வளர்ச்சியைத் தொடர்ந்து சில புள்ளி விவரங்களை காற்றில் பறக்கவிட்டார் முதல்வர். அதில் மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதி வெறும் 1.21 விழுக்காடு என்றார். மத்திய அரசின் மொத்த வருவாயும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப் படுவதில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்வேறு துறைகளுக்கும் ஒவ்வொரு மாநிலங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் தேவையான செலவினங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுதான் நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் சொல்கிறது; Federal structure என்று மணிக்கு முன்னூறு தடவை சொல்லும் திமுக.,வினர் எப்போதாவது அரசியல் அமைப்பு சட்டத்தை படிக்க வேண்டும்.

அவர் சொன்ன 1.21 விழுக்காடும் தவறு. 2021-22ஆம் மாநிலங்களுக்குப் பகிர்ந்து வழங்கிய நிதி 7.4 லட்ச கோடி ரூபாய், தமிழகத்திற்கு மத்திய அரசிலிருந்து பகிரப்பட்ட நிதி 70,189 கோடி ரூபாய் ஆகும். அதாவது 9.4 விழுக்காடு; அது மட்டும் அல்லாது 2009-14 ஆண்டுகளில் திமுக அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதி 62,615 கோடி ருபாய். அதே 2014-19 வரை பாஜக., தலைமையில் உள்ள மத்திய அரசு வழங்கிய நிதி 1,19,455 கோடி ரூபாய்.

பாரத்மாலா மற்றும் சாகர்மாலா திட்டத்திற்கு மட்டும் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்த செலவு 2.05 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், இதை வருவாய் இழப்பு என்று திமுக.,வினரால் மட்டுமே சொல்ல முடியும்.

கோவிட் காலகட்டத்தில் மாநிலங்களின் நிதிச் சுமையைக் குறைக்க 2020-21 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு ரூ.2.78 லட்சம் கோடி இழப்பீடு விடுவிக்கப்பட்டது, மேலும் அந்த ஆண்டிற்கான எந்தத் தொகையும் நிலுவையில் இல்லை. இதுவரை மாநிலங்களுக்கு ரூ.7.35 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது, தற்போது, 2021-22 ஆம் ஆண்டிற்கு மட்டும், நிதியில் போதுமான இருப்பு இல்லாததால், ரூ.378,704 கோடி இழப்பீடு நிலுவையில் உள்ளது. இது நான்கு மாத இழப்பீடு மட்டுமே ஆகும்.

பொதுவாக, ஒரு நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி பத்து மாதங்களுக்கான இழப்பீடு அந்த ஆண்டில் வெளியிடப்படும் மற்றும் பிப்ரவரி-மார்ச் இழப்பீடு அடுத்த நிதியாண்டில் மட்டுமே வெளியிடப்படும். 2021-22 ஆம் ஆண்டின் பத்து மாதங்களில் எட்டு மாதங்களுக்கான இழப்பீடு ஏற்கெனவே மாநிலங்களுக்கு விடுவிக்கப் பட்டுள்ளது. செஸ் தொகையானது இழப்பீட்டு நிதியில் சேரும்போது நிலுவையில் உள்ள தொகையும் விடுவிக்கப்படும்.

இவர்கள் சட்டப்பேரவையில் வாசித்த நிதிநிலை அறிக்கையில் சுமார் 6500 கோடி ரூபாய் மட்டுமே GST நிலுவை என்று குறிப்பிட்டிருந்தார்கள். நேற்று 14,006 கோடி என்கிறார்கள். எந்த மாதத்திற்கான இழப்பீடு இது? முதல்வர் எதைக் கொடுத்தாலும் வாசிப்பதா? விசாரிக்க மாட்டீர்களா?

மத்திய அரசு மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மற்றும் மற்ற நிறுவனங்களுக்கு தமிழக அரசு வைத்திருக்கும் நிலுவை தொகை 25,925 கோடி ரூபாய். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தமிழக அரசு மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வைப்புத் தொகை மட்டும் 10,000 கோடி ரூபாய்.

நேற்று மேடையில் பாரதப் பிரதமர், தமிழக முதல்வர் இந்தத் தொகையை விரைவில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று சொல்லியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? ஆனால் அவரோ தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் நேசிக்கும் ஒரு மாபெரும் தலைவர், அதனால் தான் பெருந்தன்மையுடன் ஒரு தலைவராக அவர் நடந்து கொண்டார்.

அடுத்ததாக கச்சத் தீவை திருப்பிப் பெறவேண்டும் என்றிருந்தார் முதல்வர். கச்சத்தீவு என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூட திமுக.,வுக்கு தகுதி கிடையாது. இவர்களும் இவர்களது கூட்டுக் களவாணியான காங்கிரஸ் கட்சியும் 1974ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரைவார்த்து விட்டு இன்று கபட நாடகம் போடுகிறார்கள்.

இலங்கையில் வாழும் தமிழர்களின் விரோதி இந்த திமுக. தமிழின துரோகி இந்த திமுக. பட்ட காயம் ஆற ஒரு மருத்துவர் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கார் நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள். 31 பில்லியன் இலங்கை ரூபாய் செலவு செய்து ஈழ மற்றும் மலையக தமிழர்களுக்கு வீடுகளைக் கட்டித் தந்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார் நமது பிரதமர்.

யாழ்ப்பாணத்தில் விமான நிலையம், காங்கேசன்துறையில் துறைமுகம் மற்றும் அவர்களது கல்வி மேம்பட செலவு செய்து வருகிறது நமது இந்திய அரசு. அவ்வளவு பாசம் இருந்தால் முதல்வர் ஒரு முறை இலங்கை செல்லட்டும், ஈழத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.

கச்சத்தீவு மீட்பு என்பது ஏதோ கடலோரம் சென்று கருவாடு வாங்குவது போல் சுலபம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் முதல்வரை என்ன சொல்வது? திமுக., இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நமது பாரதப் பிரதமர் பார்த்துக் கொள்வர். 2017ஆம் ஆண்டு தூக்குக்குக் காத்திருந்தவர்களை சிறையிலிருந்து மீட்டு வந்தார் நமது பிரதமர். உங்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருந்தால், மெரீனா கடற்கரையில் இரண்டு மணி நேர உண்ணாவிரதம் இருந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றிருப்பீர்கள்.

இன்று இலங்கையில் நிலவும் பொருளாதாரச் சிக்கலிலிருந்து அவர்களை மீட்க உதவிக் கரம் நீட்டிய ஒரே நபர் பாரதப் பிரதமர் மோடி என்பதை முதல்வர் நினைவில் வைத்துக் கொண்டு பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

திமுக.,வின் பழைய அறுந்த ரீல் தமிழ் மொழிப் பாதுகாப்பு. சரி நீங்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்ன? வராத ரயில் பாதையில் தலையை வைத்துத் தூங்கியதை தவிர்த்து!

தேசியக் கல்விக் கொள்கையில் அவரவர் தாய் மொழிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் இதே கேள்வியைக் கேட்க வேண்டும். ஹிந்திதான் அலுவல் மொழி என்று அவர் அனுப்பிய சுற்றறிக்கையை உங்களுக்கு அனுப்பி வைக்க தமிழக பாரதிய ஜனதாக் கட்சி கடமைப் பட்டுள்ளது.

உலகம் எங்கும் தமிழ் மொழியை எடுத்துச் சென்ற ஒரே பிரதமர் நமது மோடி அவர்கள். அதைப் பற்றி நீங்கள் என்றாவது பாராட்டியதுண்டா? உங்கள் அரசியல் பிழைப்பிற்காக மக்களை திசை திரும்புவதைத் தவிர நீங்கள் செய்த சாதனை என்ன?

நீட் தேர்வு ரத்து என்பது நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி. அது நிறைவேறாது. ஏன் என்பதற்கு காரணமும் உங்களுக்குத் தெரியும்! அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்ட ஒரு தேர்வு முறையை ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியமற்றது. அது மட்டுமின்றி முன்னாள் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியது போல, இப்போது உங்களால் தனியார் பொறியியல் கல்லூரிகளிடம் இருந்து வசூல் செய்ய முடியவில்லை.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் 59 சதவீத மாணவர்கள் பணம் கொடுத்து பயிற்சி வகுப்புகளில் சேராமல் வெற்றி பெற்றுள்ளார்கள். ஏழை எளிய மக்களின் மருத்துவக் கனவு நீட் தேர்வு மூலமாக நனவாகியுள்ளது. மருத்துவப் படிப்பு கோபாலபுரத்தாருக்கு மட்டுமே என்று ஏதாவது விதி உள்ளதா?!

அப்படியே உங்களுக்கு நீட் தேர்வு விலக்கு வேண்டுமென்றால் ஓயாமல் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் வில்சன் மற்றும் R.S.பாரதியை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடச்சொல்லுங்கள். அப்படிப் போட்டால் ஒரே நாளில் உங்கள் ஒட்டுமொத்த நாடகமும் வெளிச்சத்துக்கு வந்து விடும்.

நீங்கள் கடந்த ஓர் ஆண்டு சாதனை என்று பிரதமர் முன் கூற மறந்ததை நாங்கள் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

முன்னாள் பாரதப் பிரதமர் திரு ராஜிவ் காந்தி அவர்களின் கொலைக் குற்றவாளியை கட்டிப் பிடித்து அன்பு பரிமாறியது.

விருதுநகர், வேலூர், தஞ்சாவூரைத் தொடர்ந்து ராமநாதபுரத்திலும் நடந்த கூட்டு பாலியல் பலாத்காரம், விருதுநகரில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒரு திமுக.,காரன் என்பது வெட்கக்கேடானது.

இதுவரை ஐந்திற்கும் மேற்பட்டோர் லாக்கப் சித்திரவதையால் உயிர் இழந்துள்ளனர். எங்கள் கட்சிப் பிரமுகர் உட்பட பலர் நடு ரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

வீடுகள் உள்ளவர் வீடுகளை இடித்தது, காலியான இடங்களில் உங்கள் மருமகன் பெயரில் பட்டாவைப் போட்டது.

தினமும் சட்டசபையில் அனைத்து அமைச்சர்களையும் தனது மகனின் புகழைப் பாடச் சொல்வது,

சினிமாத் துறையை ஆட்சிக்கு வந்த நாள் முதல் மொத்தக் குத்தகைக்கு எடுத்தது.

Sweet box ஊழல், பொங்கல் தொகுப்பில் ஊழல், மின்சாரத் துறையில் ஊழல் என அனைத்திலும் ஊழல்! ரோடு போடாமல் கரூரில் கமிஷன் அடித்தது என்று நீண்டு கொண்டே போகிறது உங்கள் சாதனை. தானே தலையிட்டு BGR நிறுவனத்திற்கு 4500 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை மீண்டும் வழங்கியது.

இது போல் எதிர்க் கட்சிகள் குரல் கொடுத்தால் கையோடு வெள்ளித் தட்டை எடுத்துச் சென்று சமூக நீதி நாடகம் என்று புகைப்படங்கள் எடுத்துப் பரப்புவது.

அதை மீறியும் கேள்வி கேட்டால் அவதூறு வழக்குப் போட்டு சிறையில் அடைப்பது

சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், நேற்று நமது பாரதப் பிரதமர் மோடி ஒரு தலைசிறந்த தலைவரைப் போல் உரையாடினார். ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் திராவிடம் எனும் வெங்காயத்தின் வெளிப்புற அடுக்கு போல நடந்து கொண்டார்.

இனியாவது முதல்வர் மற்றவர்களின் கைப்பிள்ளையாக இல்லாமல், சுயமாக சிந்தித்து செயல்பட்டு அடுத்த முறை பாரதப் பிரதமர் சென்னை வருகையில் திமுக., தலைவராக இல்லாமல் தமிழக முதல்வராகக் கலந்து கொள்வார் என்று பாரதிய ஜனதா கட்சி நம்புகிறது.

அடுத்த வாரம் ஆதாரங்களுடன் உங்கள் அரசு செய்து வரும் இரண்டு ஊழல்களை பத்திரிக்கையாளரிடம் வழங்கவுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றும் தேசப் பணியில் – அண்ணாமலை

என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe