முல்லைப் பெரியாறு அணை, பெரியாறு அணை முகாம், தேக்கடி முகாம் பணியாளர்களுக்கு செயற்கைக்கோள் அலைபேசிகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறை சார்பில் முல்லைப் பெரியாறு அணையில் பணிபுரியும் தலைமைப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், பெரியாறு அணை முகாம் மற்றும் தேக்கடி முகாம் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக ரூ.9.50 லட்சம் மதிப்பிலான 6 செயற்கைக்கோள் அலைபேசிகளை வழங்கினார்.
முல்லைப் பெரியாறு அணையில் தரைவழி தொலைபேசி இணைப்பு இல்லாத காரணத்தால் பேரிடர் காலங்களில் அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர் வெளியேற்றம், மழையளவு போன்ற விபரங்களை உயர் அலுவலர்களுக்கும், தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களுக்கும், பேரிடர் மேலாண்மை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்து தக்க ஆலோசனைகள் பெற்று வெள்ள மேலாண்மை மேற்கொள்ள சிரமம் ஏற்படுகிறது.
மேலும், முல்லைப் பெரியாறு பிரதான அணைக்கு படகில் 14 கீ.மீ தூரம் பயணம் செய்யும்போது ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப் பகுதியில் செல்லும்போது அலைபேசி தொடர்பு கிடைப்பதில்லை.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஆகியோர் பெரியாறு அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது செயற்கைக்கோள் அலைபேசி வழங்கிட முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி இந்த தொலைபேசி வழங்கப்பட்டுள்ளது.
