பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாருமண்டபத்தில் துவங்கிய வேகத்தில் 23தீர்மானங்களும் ரத்துசெய்ய ப்படுவதாக கூறி பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி காலை 9.15 மணிக்கு மீண்டும் நடைபெறும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.
அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழுகூட்டம் துவங்கியது. பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார். இந்நிலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தீர்மானங்களை வாசிக்க இருந்த நிலையில் 23 தீர்மானங்களை பொதுக்குழு நிராகரிக்கிறது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக உரையாற்றினார்.
23 தீர்மானங்களையும் அதிமுக பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. பொதுக்குழு தீர்மானங்களை பொன்னையன் முன்மொழிவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சி.வி.சண்முகம் குறுக்கிட்டு அறிவித்தார். பொதுக்குழுவில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் ஏற்பட்ட நிலையில் ஓபிஎஸ் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினார்.
பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக எடப்பாடி தரப்பு அறிவித்ததால் ஓபிஎஸ் அதிர்ச்சி அடைந்தார்.
அதிமுகவில் முதன்முறையாக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது.
பின்னர் பேசிய கே.பி.முனுசாமி, அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை தீர்மானம் எப்போது வருகிறதோ அப்போதுதான் 23 தீர்மானமும் நிறைவேறும் என்று கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ் மகன் உசேன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி காலை 9.15 மணிக்கு நடைபெறும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார்.