கேரளா கொல்லம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய தென்மேற்கு பருவமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் குற்றால அருவியில் சீசன் களைகட்டும். இங்குள்ள பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, புலியருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் ஆர்பரித்து வரும் தண்ணீரில் குளிக்க பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பெய்து வந்த மழையால் பிரதான அருவியான குற்றால அருவில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்து வருகின்றது.
இதனால் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தது மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் வெள்ளப்பெருக்கை பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
