
நாளை புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில் இன்று இபிஎஸ் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.ஏன்? எதற்காக?என பலரும் ஆருடம் சொல்லி வருகிறார்கள்.
ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜனதா மேலிடம் அழைத்தது. அந்த அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். அசோகா ஓட்டலில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவிலும் கலந்துகொண்டார். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி 4 நாட்கள் தங்கியிருக்க திட்டமிட்டு இருந்தார். அதாவது நாளை (25-ந்தேதி) நடைபெற உள்ள புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவும், முக்கியமாக டெல்லியில் தங்கியிருக்கும் நேரத்தில் மோடி, அமித்ஷாவை சந்தித்து பேசவும் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினை, ஓ.பன்னீர் செல்வம் விவகாரம் ஆகியவற்றை எடுத்து சொல்லி பெருவாரியான நிர்வாகிகள் ஆதரவு தனக்கு இருப்பதை சுட்டிக்காட்டி பா.ஜனதா ஆதரவையும் பெற்றுவிட திட்டமிட்டு இருந்ததாகவும் அரசியல் நோக்கர்கள் கூறினர்.
ஆனால் தனது பயண திட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பியுள்ளார்.
மோடி, அமித்ஷா இருவரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்காமலேயே திரும்பிஉள்ளார். அவரது முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி டெல்லி வட்டாரத்தில் விசாரித்த போது புதிய தகவல்கள் வெளியானது. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத முக்கிய நிர்வாகிகள் தரப்பில் கூறியதாவது:-
மோடியின் குட் புக்கில் எடப்பாடி பழனிசாமியும் இருக்கிறார். எனவே அவரை சந்திக்க மோடி நிச்சயம் நேரம் ஒதுக்கி கொடுத்து இருப்பார். மோடிக்கு தொடர் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சந்தித்து பேச வேண்டும் என்று விரும்பியிருந்தால் எடப்பாடி பழனிசாமி நாளை வரை டெல்லியில் தங்கி இருந்து இருப்பார். அவர்களை சந்திக்காமல் தவிர்த்ததற்கு வேறு முக்கிய காரணங்கள் உள்ளன. அ.தி.மு.க.வில் நிலவும் பிரச்சினைகளை பா.ஜனதா மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சகிகலா ஆகியோர் தனித்தனியாக இயங்குவதால் ஏற்பட்டுள்ள சாதக, பாதகங்களை ரகசியமாக கேட்டறிந்து வருகிறார்கள். தற்போதைய சூழலில் இந்த பிரிவுகள் அ.தி.மு.க.வுக்கு பலவீனமாகவே இருக்கும். இதே பிளவுகளுடன் 2024 பொது தேர்தலை சந்தித்தால் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வெற்றியை பாதிக்கும் என்று மோடியிடமும், அமித் ஷாவிடமும் தமிழகத்தை சேர்ந்த அரசியல் கணிப்பாளர் ஒருவர் தெளிவுப்படுத்தி இருக்கிறார். பா.ஜனதா தலைவர்களின் மனநிலையை டெல்லியில் தங்கியிருந்த போது எடப்பாடி பழனிசாமி கேள்விப்பட்டுள்ளார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மோடி, அமித்ஷாவை சந்திக்க செல்லும் போது அவர்கள் இப்படி ஒரு யோசனையை தெரிவித்தால் தேவையற்ற தர்ம சங்கடத்தை உருவாக்கும். எனவே அவர்களை சந்திப்பதை தவிர்ப்பதே நல்லது என்று கருதி இருக்கிறார். எனவே தான் சாமர்த்தியமாக மோடி, அமித்ஷாவை ஜனாதிபதி பிரிவு உபசார விழாவின் போது சந்தித்து விட்டு, புதிய ஜனாதிபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு சென்னைக்கு திரும்புகிறார். இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார். எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை முன் வைத்த காலை பின் வாங்குவதில்லை என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார். பெருவாரியான நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவை தன்வசப்படுத்தி இருக்கும் நிலையில் இதே வேகத்தில் கட்சியை கொண்டு செல்லவே விரும்புகிறார். மீண்டும் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சேர்ப்பது பா.ஜனதாவுக்கு ஒருவேளை ஆதாயமாக இருந்தாலும் தமிழகத்தில் தன்னால் அரசியல் செய்யமுடியாது என்பதால் இந்த திட்டத்தை எக்காலத்திலும் ஏற்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.இது போன்ற காரணங்களால் இபிஎஸ் நாளை நடை பெறும் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை தவிர்த்து சென்னை திரும்பினார் என பலரும் கூறுகின்றனர்.அதிமுக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் மாயம், கட்சி நிர்வாகிகள் வீடுகள் அலுவலகங்களில் அடிக்கடி நடக்கும் ரெய்டு இவைகள் காரணமாக இபிஎஸ் சென்னை திரும்பினார் எனவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ் கட்சி விவகாரங்கள் குறித்து இப்போது கேட்காதீங்க… ஓ.பி.எஸ். பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துள்ளார் ஈ.பி.எஸ்.
செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரிவுபசார விழாவில் கலந்துகொண்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியளார்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரிவுபசார விழாவில் கலந்துகொண்டதாக தெரிவித்தார். அப்போது, அதிமுகவின் வங்கிக்கணக்கை முடக்க வேண்டும் என ஓபிஎஸ் கடிதம் எழுதியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் அதுபற்றி பதில் அளிக்க முடியாது என்றும், வழக்குகள் முடிந்த பிறகு அதுபற்றி கருத்துகள் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். நீதிமன்றத்தில் மாறி மாறி வழக்கு போடப்படுவதால், கட்சி விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
