
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம்பக்தர்களின் விண்ணை முட்டும் கோவிந்தா கோபாலா சரணகோஷம் முழங்க வெகுவிமர்சையாக துவங்கி நடைபெற்றது.
இந்தியாவில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடி பூரம் நட்சத்திரத்தில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறும்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோவில் வளாகத்திற்குள் தங்க தேர் திருவிழா நடைபெற்றது. இந்தநிலையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தேரோட்டம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 9.05க்கு துவங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து மேள தாளங்களுடன் கீழ ரத வீதிக்கு வந்து, தேரில் எழுந்தருளிய பிறகு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து தேரோட்டம் துவங்கி நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தேரோட்ட விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேரோட்ட நிகழ்வையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தேரோட்டத்தை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை கள்ளழகர் கோயில்களில் இருந்து பட்டு, மங்களப் பொருட்கள் நேற்று கொண்டு வரப்பட்டன.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரை தேரோட்ட நாளில், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இருந்து மங்கலப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு ரங்கநாதருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அதற்கு எதிர் சீராக ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டத்தின் போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மாலை, மஞ்சள், குங்குமம், வளையல்கள், பழங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் கொண்டு வரப்படுவது வழக்கம்.
இதைப்போல் மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழாவிற்கும், ஆண்டாள் கோயில் சார்பில் மங்கள பொருட்கள் வழங்கப்படுகிறது.அதன்படி நேற்று காலை 11:00 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து மங்களப் பொருட்கள் ஆண்டாள் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு சுவாமிக்கு அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

