தமிழகத்தின் வரவேற்பு, விருந்தோம்பல், அன்புக்கு நன்றி தெரிவித்து, பிரியாவிடை பெற்ற வெளிநாட்டு வீரர்கள்..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

Tamil News large 3096728 - 2026

மாமல்லபுரத்தில் 11 நாட்கள் கோலாகலமாக நடந்த சர்வதேச 44 வது செஸ் ஒலிம்பியாட் திருவிழா, செவ்வாய் கிழமை நிறைவடைந்தது. தமிழகத்தின் வரவேற்பு, விருந்தோம்பல், அன்புக்கு நன்றி தெரிவித்து, வெளிநாட்டு வீரர்கள் பிரியாவிடை பெற்றனர்.

‘சர்வதேச செஸ் ஒலிம்பியாட் – 2022’ போட்டி, சென்னையில் கலை நிகழ்ச்சிகளுடன், ஜூலை 28ல் துவங்கியது. சர்வதேச செஸ் வீரர்களை, பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் தமிழக அரசு வரவேற்று உற்சாகப்படுத்தியது. பிரதமர் மோடி போட்டியை துவக்கி வைத்தார். விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொடர்ந்து, மாமல்ல புரத்தில் உள்ள ‘போர் பாயின்ட்ஸ்’ விடுதியில், 29ல் போட்டி துவங்கியது. 184 நாடுகளின், 1,700க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

Tamil News

போட்டிக்காக இரண்டு அரங்குகள் அமைக்கப்பட்டன. முதல் அரங்கில், 49 போட்டிகள் நடத்தப்பட்டன. 196 பலகைகளில், 56 ஆண்கள், 42 பெண்கள் அணியினர் விளையாடினர். இரண்டாம் அரங்கில், 126 போட்டிகள் நடத்தப்பட்டன. 512 பலகைகளில், 66 ஆண்கள், 60 பெண்கள் அணியினர் விளையாடினர். தினமும் மாலை 3:00 மணிக்கு விளையாட துவங்கி, இரவு 8:30 மணி வரை நீடித்தது. முதல் சுற்றின் உற்சாக துவக்கம், அடுத்தடுத்த சுற்றுகளில் விறுவிறுப்பானது. நேற்றைய 11வது இறுதிச் சுற்றில், காலை 10:00 மணிக்கு போட்டிகள் துவங்கின. மாலை 3:30 மணிக்கு, போட்டிகள் முடிவுற்ற உடனே, ‘டிஜிட்டல்’ செஸ் பலகைகள் அகற்றப்பட்டன.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கடந்த 11 நாட்கள், சர்வதேச திருவிழா போல கோலாகலத்துடன் நடந்த இப்போட்டி, நேற்றுடன் நிறைவடைந்தது. முன்னதாக வீரர்கள், தங்களின் உடமைகளுடன் விடுதியில் இருந்து கிளம்பியபோது, விடுதி நிர்வாகிகளிடம், ‘தமிழகத்தின் விருந்தோம்பல் பண்பு மிகவும் கவர்ந்துள்ளது. எப்போதும் இந்திய நாட்டையும், அன்பு செலுத்திய மக்களையும், மாமல்லபுரத்தையும் மறக்கமாட்டோம்’ என, உணர்ச்சி பொங்க கட்டித்தழுவி, பிரியாவிடை பெற்றனர். தமிழக சுற்றுலாத் துறை, வீரர்களுக்கு நினைவு பரிசாக, சிறிய அளவில் கடற்கரை கோவில் பைபர் சிற்பம், திருக்குறள் ஆங்கில புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கியது.

மாமல்லபுரம், உலக பாரம்பரிய சின்ன இடம் என்பதால், வெளிநாட்டு பயணியர், சுற்றுலா வருகின்றனர். உலக செஸ் போட்டி இங்கு நடத்தியதால், 2,500க்கும் மேல், வெளிநாட்டவர் தங்கி விளையாடியுள்ளனர். தமிழக பாரம்பரிய ஊரில், இதை நடத்தியது, தமிழக அரசிற்கே பெருமை சேர்க்கும். வருங்காலத்தில் மற்ற சர்வதேச விளையாட்டை இங்கு நடத்த, ஆர்வம் உருவாகும். மேலும், போட்டியால் சுற்றுலா வளர்ச்சியும் ஏற்படும்.

போட்டி நடந்த விடுதி வளாகத்தில், செஸ் காய்கள், சர்வதேச நாடுகளின் தேசியக்கொடிகள் ஆகியவற்றின் படங்களுடன், பல வண்ண பதாகைகள், வரவேற்பு வளைவுகளின் அலங்காரம், வீரர்களை மட்டுமின்றி, சுற்றுலா பயணியரையும் வெகுவாக கவர்ந்தது.
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில், வெளிநாட்டு வீரர்கள் ஆசை, ஆசையாக படம் எடுத்துக் கொண்டனர்.
வீரர்களுக்கென தயாரிக்கப்பட்ட 47 வகையான சைவ, அசைவ உணவுகளை பரிசோதனை செய்ய நடமாடும் வாகனம் அமைக்கப்பட்டிருந்தது. உணவு தரத்துடனும், சுவையாகவும் இருந்ததால், அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது.
உலகில் முதல்முறையாக, 707 டிஜிட்டல் செஸ் பலகைகள் பயன்படுத்தப்பட்டு, அவற்றின் காய் நகர்த்தல் செயல்பாடு, கணினியில் ஒருங்கிணைக்கப்பட்டு போட்டி நடந்தது.
தனியார் விடுதிகளில் அளிக்கப்பட்ட யோகா பயிற்சியை, வீரர்கள் உற்சாகத்துடன் கற்றுக்கொண்டனர்.
போட்டியில் வென்று வந்த அணியினருக்கு, விடுதி நிர்வாகம் கேக் வெட்டி பாராட்டு தெரிவித்ததில், வீரர்கள் நெகிழ்ந்தனர்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img