குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இன்று வெளியிட்டார்.
இரண்டு கட்டமாக நடைபெறும் தேர்தலின் முதல் கட்டம் டிசம்பர் 1-லும் இரண்டாம் கட்டம் டிசம்பர் 5-லும் நடைபெறவுள்ளது. வாக்கெண்ணிக்கை 8ஆம் தேதி நடைபெறுகிறது.
ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு மட்டும் நவம்பர் 12-ல் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையர்கள் இன்று வெளியிட்டுள்ளனர்.
தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் பேசியதாவது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் புதிதாக 4.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மொத்தம் 51,782 வாக்குச்சாவடிகளில் 4.90 கோடி வக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யவுள்ளனர். அனைத்து வாக்குச் சாவடிகளும் தரைத்தளத்தில் அமைக்கப்படும்.
இரண்டு கட்டமாக குஜராத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ஆம் தேதி 93 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது.
முதல் கட்ட தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் நவம்பர் 5ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 10ஆம் தேதியும் தொடங்குகிறது. வேட்புமனு திரும்பப் பெற முதல்கட்டத்திற்கு நவ. 17 மற்றும் இரண்டாம் கட்டத்திற்கு நவ. 21ஆம் தேதி கடைசி நாளாகும்.
தேர்தலுக்கான வாக்கெண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தை தற்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. ஆட்சிக் காலம் அடுத்தாண்டு பிப்ரவரி 18ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
