
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை விருதுநகர் சிவகாசி பகுதியில் கண்மாயில் மூழ்கி நால்வர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டையில் கண்மாயில் குளிக்கச்சென்றபோது அதில் மூழ்கி அண்ணன், தம்பி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி மேலதெருவை சேர்ந்தவர் சரத்குமார் (வயது33). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சந்தியம்மாள். இவர்களது மகன்கள் சித்தார்த் (8), சந்திரமணி (7).
அதேபகுதியில் உள்ள பள்ளியில் சித்தார்த் 4-ம் வகுப்பும், சந்திரமணி 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று பள்ளி முடிந்ததும் இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள பாப்பாவி நீராவி கண்மாயில் குளிக்க சென்றனர்.
நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் அவர்களை பல இடங்களில் தேடினர். அப்போது கண்மாய் தண்ணீரில் சித்தார்த் உடல் மிதப்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சித்தார்த்தின் உடல் மீட்கப்பட்டது. மேலும் சந்திரமணியை தேடினர். அப்போது கண்மாயின் வேறு ஒரு பகுதியில் சந்திரமணியின் கால் மட்டும் வெளியே தெரிந்தது.
இதையடுத்து சந்திரமணியின் உடலையும் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 2 பேரின் உடல்களையும் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்மாயில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி விவேகானந்தர் காலனிைய சேர்ந்தவர் பரமசிவம் (வயது 33). மாற்றுத்திறனாளியான இவர், சகோதரர் உத்தமனுடன் பாத்திரம் வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று விருதுநகர் அருகே உள்ள இ.குமாரலிங்கபுரத்தில் உத்தமன், பரமசிவம் ஆகியோர் பாத்திரம் வியாபாரத்திற்கு சென்றனர். அப்போது அங்குள்ள கண்மாயில் மீன்பிடிக்க செல்வதாக பரமசிவம் கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உத்தமன், கண்மாய் பகுதியில் சென்று பார்த்தபோது தண்ணீரில் பரமசிவம் பிணமாக மிதந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மீன்பிடித்து கொண்டிருந்தபோது பரமசிவம் கண்மாயில் தவறி விழுந்து இறந்திருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படை யில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள எல்லிங்க நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கவிதா (29). வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத் தன்று கவிதா அருகில் உள்ள நீர்நிலைக்கு துணி துவைக்க சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது கவிதா தண்ணீரில் பிணமாக மிதந்தார். வலிப்பு ஏற்பட்டதில் அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
