

தமிழக கேரளா வனப்பகுதி பெரியார் புலிகள் சரணாலயம் பகுதியில் பெய்த மழையால் ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அய்யனார் கோவில் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கரைக்கு அப்புறம் உள்ளவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது அய்யனார் கோவில் இக்கோவிலுக்கு செல்லும் வழியில் நீரோடை ஒன்று உள்ளது. மழை நேரங்களில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் இந்த ஓடையை கடந்து செல்வது மிக சிரமமான காரியமாகும்.
இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரம் மற்றும் கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அய்யனார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கும் நீரோடையில் குளிப்பதற்காகவும் சென்று இருந்தனர்.
மாலையில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அய்யனார் கோவில் நீரோடையில் வழக்கத்தை விட அதிகமாக நீர்வரத்து ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக கோவில் பகுதி மற்றும் குளிப்பதற்காக சென்றவர்கள் கரைக்கு வர முடியாமல் தவித்தனர்.
இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து அக்கரையில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை பத்திரமாக கயிறு கட்டி மீட்டனர். விபரம் குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, வட்டாட்சியர் சீனிவாசன் தலைமையிலான குழு மூலம் வெள்ளத்தில் சிக்கிய சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் மீண்டநிலையில் யாரேனும் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனரா என தீயணைப்பு வீரர்கள் கண்காணித்து வருகின்றனர்.இரவு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.