ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிர்த்தான் ஊராட்சியில் உள்ள கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம் தவிர்த்தான் ஊராட்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலத்துறை கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை – கொல்லம் நான்கு வழிச்சாலையில் வடுகப்பட்டி முதல் தெற்கு வெங்காநல்லூர் வரையிலான 36 கிலோமீட்டர் நெடுஞ்சாலை பணிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம் தவித்தான் ஊராட்சியில் கல் குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கல்குவாரி அமைப்பதற்கு இந்தப் பகுதி சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
56 ஏக்கர் பரப்பளவில் கல்குவாரி அமையும் இடத்தை சுற்றிலும் முள்வேலி அமைக்கப்பட்டு இயந்திரங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. குடியிருப்பு மற்றும் விலை நிலங்களுக்கு அருகே கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுற்றிலும் முள்வேலி அமைக்கப்பட்டுள்ளதால் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் முருகன் என்ற விவசாயி, எள் அறுவடை செய்வதற்காக தொழிலாளர்களை அழைத்துச் சென்றார். அப்போது கல்குவாரியின் நுழைவாயிலை அடைத்து இவ்வழியாக செல்ல கூடாது என காவலாளி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதை கண்டித்து அச்சம் தவிர்த்தான் மற்றும் நரியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்குவாரி நுழைவாயிலின் முன்னமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டாட்சியர் நேரில் வந்து விவசாய நிலங்களுக்குச் செல்ல உரிய பாதை வசதி ஏற்படுத்தி தந்தால் மட்டுமே இவ்விடத்தை விட்டு செல்வோம் என்று கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
