
நாளை சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்- பொன்னம்பல மேட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பக்தர்கள் ஜோதி தரிசனம் தெரியும் இடங்களில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர்.
மகர ஜோதியை தரிசிக்க கடந்த இரண்டு நாட்களாகவே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மகர ஜோதி அன்று ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும்போது, சன்னிதானத்தில் ஐயப்பன் திருவாபரணம் அணிந்து அருள்பாலிப்பார்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு திருவிழா நடந்து வருகிறது. மகர விளக்கு திருவிழாவின்போது ஐயப்பன் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதனை காண நாடு முழுவதிலும் இருந்து ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வருவார்கள். இந்த ஆண்டுக்கான மகர விளக்கு தரிசன நிகழ்ச்சி நாளை மாலை நடக்கிறது. அப்போது ஐயப்பன் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஜோதியாய் காட்சி அளிப்பார். அப்போது பக்தர்களின் சரண கோஷம் விண்ணை பிளக்கும். மகர ஜோதியை தரிசிக்க கடந்த இரண்டு நாட்களாகவே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஜோதியை தரிசிக்க காட்டுப்பகுதியில் முகாமிட்டு தங்கி உள்ளனர்.
நாளை ஜோதி தரிசனம் முடிந்த பின்னரே அவர்கள் மலை இறங்குவார்கள். இதனால் சன்னிதானத்திலும், காட்டு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் தங்கி உள்ளதால் நாளை சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் நாளை பகல் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனக்கூறப்பட்டுள்ளது. மேலும் சன்னிதானம், பொன்னம்பலமேடு பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே மகர ஜோதி தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் ஊர்வலமாக சன்னிதானத்திற்கு எடுத்து வரப்படும். இந்த திருவாபரண பெட்டிக்கு பக்தர்கள் பல இடங்களில் வரவேற்பு அளித்தனர்.
மகர ஜோதி அன்று ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும்போது, சன்னிதானத்தில் ஐயப்பன் திருவாபரணம் அணிந்து அருள்பாலிப்பார். அதனை காணவும் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மகர ஜோதி தரிசனம் முடிந்த பின்னரே பக்தர்கள் சபரிமலையை விட்டு வெளியேறுவார்கள்.
சபரிமலை மகரஜோதியை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். கூட்ட நெரிசல் காரணமாக ஜோதியை காண்பதில் பக்தர்களுக்கு சிரமம் இருக்கும். இதற்காக பக்தர்கள் முன்கூட்டியே சபரிமலைக்கு செல்லும் காட்டு பாதை பகுதியில் முகாமிட்டு அங்கேயே தங்குவது வழக்கம்.
பக்தர்கள் பெருவழிப்பாதை, வண்டிப்பெரியார் பாதை உள்ளிட்ட பாதைகளில் கூடாரம் அமைப்பதில் நேற்றுமுன்தினம் முதல் ஆர்வம் காட்டினர். இதனால் சபரிமலையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் எங்கு பார்த்தாலும் வரும் வழியில் கூடாரங்களாக காட்சி அளிக்கிறது. இதில் பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்குகிறார்கள். இந்த பகுதியில் இருந்து பார்த்தால் பொன்னம்பல மேடு ஜோதி தரிசனம் தெளிவாக தெரியும் என்பதால் இங்கு தங்குவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.