காசி தமிழ் சங்கமம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜகவினர் நடத்த வேண்டும் என டெல்லியில் நடைபெற்று வரும்பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் இரண்டாவது நாளாக பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது.
பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக ஜனவரி 10 ஆம் தேதி பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நடவடிக்கைகள், தேசிய செயற்குழு கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இரு நாள்கள் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தில்லி பாஜக அலுவலகத்தில் தொடங்கியது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர்கள், அனைத்து மாநில பொதுச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
தொடர்ந்து 2 ஆவது நாளாக இன்றும் கூட்டம் தொடர்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துகொண்ட நிலையில் இன்றும் கலந்துகொண்டுள்ளார். நிகழாண்டு நடைபெறும் மாநிலத் தோ்தல்கள், 2024 நாடாளுமன்றத் தோ்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கட்சி சார்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
பாஜக தேசிய செயற்குழுவின் முதல் நாள் கூட்டத்தில் காசி தமிழ் சங்கமம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜகவினர் நடத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி அறிவுறித்தியுள்ளார்.

மேலும், நிகழ்ச்சிகள் மூலம் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகத்தை மாநிலங்கள் பரிமாற்றம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களும் இந்த முக்கிய கூட்டத்தில் பங்கேற்றனர்.
தேசிய செயற்குழு கூட்டத்தின் மூன்று தீர்மானங்களும் அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச விவகாரங்களை உள்ளடக்கியதாக இருந்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு நடைபெற உள்ள 9 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடளுமன்ற தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்கபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள என்டிஎம்சி மாநாட்டு மையத்தில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடியுடன் 35 மத்திய அமைச்சர்கள், 12 முதல்வர்கள், 37 பிராந்திய தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக இந்தக் கூட்டத்துக்கு படேல் சவுக் பகுதியில் இருந்து என்டிஎம்சி தலைமை அலுவலகம் வரை சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு பிரதமர் மோடி ஊர்வலமாக வந்தார்.
பாஜக தொண்டர்களும் ஆதரவாளர்களும் பிரதமர் மீது மலர்களை தூவியும் முழக்கங்கள் எழுப்பியும் வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலை நெடுகிலும் பிரதமரின் மிகப்பெரிய கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. அரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக சுவரொட்டிகளும் இடம்பெற்றிருந்தன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பலர் தேசபக்தி பாடல்கள் பாடினர்.
நேற்றைய கூட்டத்துக்கு பிறகு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.எஸ்.பிரசாத் கூறும்போது, “2023-ம் ஆண்டு மிகவும் முக்கியமானது என்றும் இந்த ஆண்டு 9 மாநிலத் தேர்தல்களிலும், 2024-ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் நாம் போராடி வெற்றி பெற வேண்டும் என்று ஜே.பி. நட்டா கூறினார். பலவீனமான சாவடிகளை கண்டறிந்து அவற்றை பலப்படுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டார். சுமார் 72,000 சாவடிகள் கண்டறியப்பட்டு, 1.32 லட்சம் சாவடிகளை எட்டியுள்ளோம்’’ என்றார்.
பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப் பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டம் நடைபெறும் என்டிஎம்சி மாநாட்டு மையத்தில் பல்வேறு கருப்பொருளிலான கண்காட்சியை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று தொடங்கி வைத்தார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் 3 ஆண்டு பதவிக் காலம் இம்மாதம் முடிவடைகிறது. இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலின்போது கட்சிக்கு அவர் தலைமை வகிக்கும் வகையில் அவரது பதவிக் காலம் இக்கூட்டத்தில் நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.