
திருப்பதி கோவில் வங்கி டெபாசிட் தொகை ரூ.15,938 கோடியாக அதிகரித்துள்ளது. டாடா நிறுவனம் வழங்கும் ரூ.150 கோடி நன்கொடையில் திருமலையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். டிசம்பர் மாதத்துக்குள் உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்படும். என திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி நிருபர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:- திருமலையில் கடற்படை எதிர்ப்பு டிரோன் அமைப்பை (நாட்ஸ்) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது சிறிய மைக்ரோ டிரோன்களை கூட உடனடியாகக் கண்டறிந்து செயல்படவிடாமல் தடுக்கும். பக்தர்கள் டெபாசிட் செய்யும் லக்கேஜ்களை பாதுகாப்பாக சேமித்து ஒப்படைக்கும் வகையில், விமான நிலையங்கள் போன்று அதிநவீன அமைப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஆர்எப்ஐடி குறிச்சொற்கள் பயன்படுத்தப்படும்.
இதற்கான சிறப்பு மென்பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த முறை நிகழ் ஆண்டு ஏப்ரல் இறுதிக்குள் அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் 396 தேவஸ்தான கல்யாண மண்டபங்கள் உள்ளது. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இவற்றில் 12 கல்யாண மண்டபங்கள் ரூ.2.8 கோடியில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, ஏசி உள்ளிட்ட வசதிகள் செய்து வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள 384 கல்யாண மண்டபங்களின் வாடகை உயர்த்தப்படவில்லை. டாடா நிறுவனம் வழங்கும் ரூ.150 கோடி நன்கொடையில் திருமலையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். அது டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படும். தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக சுமார் 7,126 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 960 சொத்துகள் மீது வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல், 2019-ஆம் ஆண்டில் ரூ.13,025 கோடியாக இருந்த தேவஸ்தான வங்கி டெபாசிட் தற்போது ரூ.15,938 கோடியாகவும், தங்கம் வைப்புத்தொகை 7,339 கிலோவிலிருந்து 10,258 கிலோவாகவும் அதிகரித்துள்ளது.
தேவஸ்தான நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மை மற்றும் அர்ப்பணிப்பை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். பல பள்ளிகள், கல்லூரிகள், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளிகள், ஊனமுற்றோர் பாலிடெக்னிக், ஏழை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் பிற சிறப்பு நிறு வனங்கள் நடத்தப்படுவதைத் தவிர, திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல சமூக நலன் செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. டிசம்பர் மாதத்துக்குள் உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்படும். அனுமன் பிறந்த இடமான அஞ்சனாத்திரியில் ரூ.50 கோடியில் மேம்பாட்டு பணிகள் மற்றும் திருமலையில் புதிய பரகாமணி கட்டடம் ரூ.23 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.