
பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் தைப்பூச விழா சிறப்புவண்டி பழநி வழியாக இயக்கப்படுகிறது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை ஜனவரி-27அன்று நடைபெற உள்ளது. மேலும் தைப்பூசத் திருவிழா வரும் பிப்ரவரி5அன்று நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாக்களைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் வசதிக்காக மதுரை – பழநி இடையே ஒரு முன்பதிவு இல்லாத சிறப்புவண்டி இயக்க தெற்கு இரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.


அதன்படி மதுரை – பழநி முன்பதிவில்லா சிறப்புவண்டி(06080) ஜனவரி 26, 27 மற்றும் பிப்ரவரி 3, 4, 5 ஆகிய நாள்களில் மதுரையிலிருந்து காலை 10.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பழநி சென்று சேரும். மறு மார்க்கத்தில் இதே நாட்களில் பழநி – மதுரை முன்பதிவில்லா சிறப்புவண்டி(06079) பழநியில் இருந்து மதியம் 02.30 மணிக்கு புறப்பட்டு மாலை 05.00 மணிக்கு மதுரை வந்து சேரும்.
இந்த சிறப்பு வண்டிகள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த வண்டிகளில் 10 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பெட்டியுடன் கூடிய வண்டி மேலாளர் பெட்டியும் இணைக்கப்படும்.
மேலும் ஏற்கனவே பழநி வழியே இயங்கிவரும் திண்டுக்கல்-கோயம்புத்தூர்-திண்டுக்கல் சிறப்புவண்டியின்(06077/06078) சேவையும் (தைப்பூசம் விழா வரை) 06-பிப்ரவரி-23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் இவ்விரு சிறப்புவண்டி சேவைகளை பயன்படுத்திக் கொள்ள தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.
