
வக்கீல் விக்டோரியா கவுரி குறித்த புகார்களை கொலிஜீயம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது என தெரிவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை இன்று பிறப்பித்தது.சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இன்று பதவியேற்றுள்ளார் விக்டோரியா கவுரி.
வக்கீல் விக்டோரியா கவுரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு எதிராக சென்னையைச் சேர்ந்த வக்கீல் அன்னா மேத்யூ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி மூத்த வக்கீல் ராஜீவ் ராமச்சந்திரன், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று காலை ஆஜராகி முறையிட்டார்.
அந்த முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம், இதுதொடர்பான மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது. இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பிற்பகலில் முறையிடப்பட்டது. முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி, உரிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படும். வக்கீல் விக்டோரியா கவுரி குறித்த புகார்களை கொலிஜீயம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில், விக்டோரியா கவுரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு எதிராக தொடர்ந்து மனு மீதான விசாரணை தொடங்கியது. காரசாரமாக விவாதம் நடைபெற்ற நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இன்று பதவியேற்றார். விக்டோரியா கவுரி. பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.