
திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் காலை 11 மணி நிலவரப்படி 32.06% வாக்குப்பதிவானதாக கூறப்படுகிறது
திரிபுராவில் பிப்ரவரி16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் பிப்ரவரி 27-ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று கடந்த ஜனவரியில் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி திரிபுராவில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 4 வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கி முதல் 3 மணி நேரம் நிறைவடைந்த நிலையில் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் வாக்குப்பதிவு அமைதியாகச் செல்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் காலை 9 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 13.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும். மேற்கு திரிபுராவில் அதிகபட்சமாக 14.56 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.காலை 11 மணி நிலவரப்படி 32.06% வாக்குப்பதிவானதாக ஏஜென்சி செய்திகள் சார்பில் கூறப்படுகிறது.

முதல்வர் மாணிக் சாஹா அகர்தலாவில் உள்ள போரோடோவாலி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்கள் அதிகளவில் வாக்களிப்பதைப் பார்க்கும்போது வெற்றி வாய்ப்பு உறுதியாகிறது. தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்” என்றார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரிபுராவில் அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் நம்பிக்கையுடன் உள்ளது. மொத்தமுள்ள 28.14 லட்சம் வாக்காளர்களில் 14.15 லட்சம் பேர் ஆண்கள். 13.99 லட்சம் பேர் பெண்கள். 62 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு 259 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதற்காக மக்கள் ஆர்வமுடன் கடும் குளிரையும் கவனத்தில் கொள்ளாமல் காலையிலேயே வாக்களிக்க வருகை தந்து கொண்டுள்ளனர்.

சாதனை ஏற்படுத்தும் வகையில் வாக்களிக்க பிரதமர் அழைப்பு ..
இந்த தேர்தலில் சாதனை ஏற்படுத்தும் வகையில் வாக்களிக்க வரும்படி பிரதமர் மோடி, மக்களை கேட்டு கொண்டு உள்ளார். இதுபற்றி அவர் இன்று காலை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், திரிபுரா மக்கள் சாதனை அளவாக அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வருகை தந்து, ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
தேர்தலில், தங்களது கடமையை நிறைவேற்ற வரும்படி இளைஞர்களை தனிப்பட்ட முறையில் கேட்டு கொள்கிறேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.