
தமிழகம் முழுவதும் 280 இடங்களில் நடந்த குரூப்-2 தேர்வில் ‘திடீர்’ குளறுபடி ஏற்பட்டது. தேர்வர்கள் எண்கள் மாறி இருந்ததால் தேர்வு எழுத வந்திருந்தவர்கள் குழப்பத்திற்குள்ளானார்கள். குளறுபடியால் சிறிது நேரம் தேர்வு எழுத வந்தவர்கள் தவிக்க நேரிட்டது.
தமிழகத்தில் குரூப் 2 பிரதானதேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வை 55 ஆயிரம் பேர் எழுதினார்கள். மொத்தம் 5 ஆயிரத்து 446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலைத் தேர்வு கடந்த ஆண்டு மே 21-ந்தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பிரதான தேர்வு இன்று நடந்தது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு நடந்தது.
கேள்வித்தாள்கள் இருந்த பண்டலை பிரித்து வினியோகம் செய்தபோது சிறிது குழப்பம் ஏற்பட்டது. தேர்வர்கள் எண்கள் மாறி இருந்ததால் தேர்வு எழுத வந்திருந்தவர்கள் குழப்பத்திற்குள்ளானார்கள். இந்த குளறுபடியால் சிறிது நேரம் தேர்வு எழுத வந்தவர்கள் தவிக்க நேரிட்டது. இதன் காரணமாக சில மையங்களில் சற்று தாமதமாக தொடங்கியது.
பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொது அறிவு, பாடங்கள் தொடர்பான தேர்வு நடைபெற உள்ளது.பிற்பகல் தேர்வு அரைமணி நேரம் காலதாமதமாக துவங்கும்..
இந்தத் தேர்வை 55 ஆயிரத்து 71 பேர் எழுதி வருகிறார்கள். அவர்களில், 27 ஆயிரத்து 306 பேர் ஆண்கள். 27 ஆயிரத்து 764 பேர் பெண்கள். ஒருவர் மூன்றாம் பாலினத்தவர். இந்தத் தேர்வுக்காக, 20 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 280 தேர்வுக் கூடங்களில் தேர்வுகள் நடைபெற்றன. சென்னையில் 8 ஆயிரத்து 315 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.