தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை- நாட்டு குண்டா? நாட்டை நாசமாக்கும் குண்டா? என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத் தலைவர் V.P. ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
ஹரியும் சிவனும் ஒன்று என இந்து ஒற்றுமையை பறைசாற்றக்கூடிய தமிழகத்தின் மிகச் சிறப்பு பெற்ற சிவஸ்தலமான தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் முன்பு 9.3.2023 நேற்று காலை நாட்டு வெடிகுண்டு போன்ற மர்ம வெடிபொருள் கோவில் வாசலில் கிடந்ததாக பத்திரிகைகளிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியாகி உள்ளது இந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் திருக்கோவில் முன்பு சிலிண்டர் போன்ற வெடிகுண்டு வெடித்து அந்த அதிர்வலைகளில் இருந்தே தமிழகம் இன்னும் மீளாத நிலையில் சங்கரன்கோவில் கோமதி அம்மன் கோவில் முன்பு நாட்டு வெடிகுண்டு போன்ற பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் இந்து ஆலயங்களின் பாதுகாப்பு எந்த அளவிற்கு கேள்விக்குறியாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரன் கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் இந்துமுன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பேசும்போது தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பயங்கரவாத அமைப்பினுடைய நடவடிக்கைகள் அதிகமாக உள்ளதாக தெரிகிறது. கேரளாவில் எல்லைப் பகுதியில் உள்ள இந்த மாவட்டத்தை காவல்துறை மிகுந்த விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என எச்சரித்து இருந்தார்.
தற்போது சங்கரன்கோவில் கோமதி அம்மன் கோவில் முன்பு கண்டெடுக்கப்பட்டுள்ள நாட்டு வெடிகுண்டு தமிழகத்தில் குறிப்பாக தென்காசி மாவட்டத்தின் பாதுகாப்பு குறைபாட்டை காட்டுகிறது. திருமணத்திற்கு வந்தவர்கள் நாட்டு வெடிகுண்டை வரவேற்புக்காக கொண்டு வந்து மறந்து வைத்துவிட்டு சென்றதாக தென்காசி மாவட்ட காவல்துறை உண்மையை மூடிமறைக்க முயற்சிப்பதாகவே தோன்றுகிறது.
திருமணத்தில் நாட்டு வெடிகுண்டுகளாக போடுகிறார்கள் . கொஞ்சம் ஏமாந்தால் திருமணத்திற்கு ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு போடுவார்கள் என்று கூட கதை சொல்லும் நிலை ஏற்படக்கூடும் என்கிற நியாயமான கேள்வி பொது மக்களிடம் எழுந்துள்ளது.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் தற்கொலைப்படை குண்டு வெடிப்பையே சிலிண்டர் வெடிப்பாக மாற்ற முயற்சி செய்த உண்மை பலருக்கு தெரியும்.
இந்த நிலையில் கோமதியம்மன் கோவில் முன்பு கிடந்த இந்த வெடிகுண்டு குறித்த சர்ச்சையையும் தென்காசி மாவட்ட காவல்துறை மூடி மறைக்க பார்க்கிறதோ என்கின்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் குறித்து தென்காசி மாவட்ட காவல்துறை தொடர்ந்து மென்மையான போக்கையே கடைபிடித்து வருவதாக தெரிய வருகிறது. புளியங்குடியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு இந்து அமைப்பு நிர்வாகியின் மரக்கடையை எரித்த உண்மை குற்றவாளிகளையே கூட இன்னும் காவல்துறை கண்டறிந்து கைது செய்ய இயலவில்லை. இந்த நிலையில் கோமதி அம்மன் கோவில் முன்பு கிடந்த இந்த வெடிகுண்டு குறித்த விசாரணையை தென்காசி மாவட்ட காவல்துறை மேற்கொண்டால் எந்தளவிற்கு மக்களின் பாதுகாப்பிற்கு பயனுள்ளதாக விரைவானதாக உண்மையானதாக இருக்கும் என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதியம்மன் கோவில் முன்பு கண்டறியப்பட்டுள்ள வெடிகுண்டு குறித்த விசாரணையை மத்திய புலனாய்வுத்துறை ( NIA) விசாரிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், தென்காசி மாவட்ட மக்களின் பாதுகாப்பை , கோவில்களின் பாதுகாப்பை, பக்தர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய சமரசமில்லாத கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது