
அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சிகள்தான் பாஜக-வின் முக்கிய இலக்காக உள்ளது. மத்திய அமைச்சரவையில் கிரிமின்னல் பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால், எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியதற்காக தகுதிநீக்கம் செய்யப்படுகின்றனர். இன்று, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு புதிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.’ என மம்தா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் இன்று மாலை 5 மணிக்கு அவசர ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். ராகுல் காந்தி விவகாரத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.