
வரும் ஏப்17 முதல் 30 வரை குஜராத்தின் பல இடங்களில் சவுராஷ்டிரா – தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசுகையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் பேசியதாவது: இந்தியாவில் உடல் உறுப்பு தானம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் 7 முதல் 8 பேரை காப்பாற்ற முடியும். உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்களாக மதிக்கப்படுவார்கள்.
இதனை எளிமைப்படுத்த நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மக்கள் அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்.
வசந்த நவராத்திரி கொண்டாடப்படும் நேரத்தில் மகளிர் சக்தியின் பெருமையை பேசாமல் இருக்க முடியாது.
சுரேகா யாதவ் என்ற பெண், வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஊட்டியை சேர்ந்த கார்த்திகி கொன்சால்வ்ஸ் தயாரித்த ‘தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற குறும்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.
நாகாலாந்தில் முதல் முறையாக 2 பெண்கள் சட்டசபை உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். ஒருவர் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். நாட்டின் கனவுகளை நிறைவேற்ற புதிய சக்தியை பெண்கள் தருகின்றனர்.
மாற்று எரிசக்தி குறித்து உலகம் முழுவதும் விவாதம் நடக்கிறது. சூரியமின்சக்தி உருவாக்கத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்த துறையில் அனைவரின் ஒத்துழைப்பு என்பது அதிகமாக உள்ளது.
நமது நாட்டில், நேரம், சூழ்நிலை மற்றும் நிலைமைக்கு ஏற்பட பல பாரம்பரியங்கள் உண்டாகின. அவை, நமது கலாசாரத்திற்கு பலம் சேர்த்ததுடன் அதனை உயர்ப்புடன் வைத்திருந்தது.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், காசியில் புதிய பாரம்பரியம் ஆரம்பித்தது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், காசி – தமிழ் பகுதிக்கு இடையேயான பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று மற்றும் கலாசார உறவுகள் கொண்டாடப்பட்டன.
அடுத்த மாதம் ஏப்17 – 30 குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கும் சவுராஷ்டிராவிற்கும் என்ன தொடர்பு என பலர் நினைக்கலாம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, குஜராத்தின் சவுராஷ்டிராவில் இருந்து ஏராளமானோர் தமிழகத்தின் பல இடங்களில் குடியேறினார்கள்.
அவர்களை, ‘சவுராஷ்டிரி தமிழர்’ என அழைக்கிறார்கள். சவுராஷ்டிரா மக்களின் உணவு முறை, பழக்க வழக்கம் ஆகியவற்றை பலர் பின்பற்றுகின்றனர்.
சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக ஏராளமானோர் எனக்கு கடிதம் எழுதி உள்ளனர். மதுரையை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் எழுதிய கடிதத்தில், ” ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, சவுராஷ்டிரா தமிழ் உறவுகளை பற்றி முதன்முறையாக ஒருவர் சிந்தித்து, சவுராஷ்டிராவில் இருந்து தமிழகத்தில் குடியேறிய மக்களை முன்னுக்கு கொண்டு வந்தார் எனக்கூறியுள்ளார்.
ஜெயச்சந்திரனின் இந்த வார்த்தைகள் ஆயிரகணக்கான தமிழ் சகோதரர் மற்றும் சகோதரிகளின் வார்த்தைகள்.
பல இடங்களில் கோவிட் அதிகரித்து வருகிறது. மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த மாதம் இடம்பெறும் 100வது மன் கி பாத் நிகழ்ச்சிக்கு அனைவரும் தங்களது கருத்துகளை அனுப்ப வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.