
இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய ஆலோசனை கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் கொரோனா பேரிடர் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்து கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 6,050 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமாக கேரளாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 273 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு இரண்டு சதவிகிதம் ரேண்டம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வார காலத்திற்கு முன்னாள் வரை இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு பாதிப்பு என இருந்து வந்த நிலையில் தற்போது தினம்தோறும் 10, 20 என்கின்ற அளவில் உள்ளது.
எனவே வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை அதிகரிக்க மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். கோவை ஈஎஸ்ஐ 1000 படுக்கைகள் தயார் நிலையிலும், அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் 24,061 ஆக்சிஜன் கான்சண்டேட்டர்களும், 260 PSA பிளான்ட்டுகளும், 2,067 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் சேமிப்பு அமைப்புகள் தயார் நிலையில் உள்ளது.
எனவே ஆக்சிஜன், படுக்கைகள், மருந்து கையிருப்பு என அனைத்தும் 100% முழுமையாக உள்ளது. தமிழ்நாட்டில். தற்போது 4000 பேர் வீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளுடன் வருபவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளோம்.
எனவே முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் 4000 பரிசோதனை என்பது கூடிய விரைவில் 11 ஆயிரம் பரிசோதனை வரை உயர்த்தலாம் என்ற பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது வருகின்ற பாதிப்புகள் பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை என்றாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.
இணை நோய் போன்ற நோய்கள் உள்ளவர்கள் தங்களை தற்காத்து கொண்டு பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிந்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டைவிட 10 மடங்கு கேரளாவில் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து மருத்துவமனைகளிலும் மருத்துவ கட்டமைப்புகளிலும் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருப்பவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தனிமைப்படுத்தி கொள்ளுங்கள், அது மிகவும் அவசியம். தமிழ்நாட்டில் இன்ஃபுளுயன்சா காய்ச்சல் முகாம்கள் 52,568 முகாம்கள் நடத்தப்பட்டு 21,லட்சத்து 5000க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர். அரசு தலைமை மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லை என்றால் தெரிவியுங்கள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவர்களையும் மருத்துவ பணியாளர்களையும் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அநேகமாக 10, 15 நாட்களில் முடிந்து விடும், அதன் பின்பு முதலமைச்சர் 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை திறந்து வைப்பார்” என தெரிவித்தார்.