லண்டனில் பென்னிகுயிக் சிலை கறுப்புத் துணியால் மூடப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
முன்னதாக நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இதன்படி, லண்டனில் பென்னிகுயிக் சிலை கறுப்புத்துணியால் மூடப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்த அவை முன்னவர் துரைமுருகன், “விவரங்களை அரசு அறிந்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து, சட்டசபையில் தெரிவிப்போம்” என்றார்.
ஆங்கிலேயப் பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக், தமிழக மக்களுக்காக பெரியாற்றின் குறுக்கே, பெரியாறு அணையை 1895ஆம் ஆண்டு கட்டி முடித்தார். தமிழகத்திற்கு குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்தார்.
அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே முற்றிலும் செழுமையடைந்து மாற்றங்கள் பெற்றன. இம்மாவட்ங்களில் தற்பொழுது சுமார் 2,19,840.81 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.