
கோவை- அவினாசி ரோடு உப்பிலிபாளைத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை விழாவில் திரளான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து வந்தனர்.
இக் கோயில் சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவு 8 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று இரவு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பல்வேறு சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை 7 மணியளவில் சக்தி கரகம், அக்னி சாட்டு புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. கோனியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் அக்னிச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும், சக்தி கரகம் எடுத்தும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றேனர்.
டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, லிங்கப்ப செட்டி வீதி, பால்மார்க்கெட், சிரியன் சர்ச் ரோடு, புரூக்பாண்ட் ரோடு, அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதி, காலீஸ்வ ராமில் ரோடு, சோமசுந்தரா மில் ரோடு வழியாக அனுப்பர்பாளையம், டாக்டர் நஞ்சப்பா ரோடு, டிஎன்எஸ்டி டெப்போ, ஜிடி டிரைவிங் பள்ளி வழியாக ஊர்வலம் தண்டுமாரியம்மன் கோவிலை அடைந்தது.
இதையொட்டி நகரில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.