
திருச்சுழி அருகே நெல்லிக்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள நெல்லிக்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வீரசூரையா, தருணவிநாயகர், அரியநாச்சியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை தொடங்கியது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு ஆன்லைன் மூலம் 506 காளைகள் முன்பதிவு செய்யப் பட்டிருந்த நிலையில், 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.
மேலும் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார். போட்டியில் முதல் காளையாக கோயில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கு 25 வீரர்கள் என காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை போட்டி நடைபெற்றது. வாடிவாசல் வழியாக காளைகள் களத்தில் காளையருக்கு சவால் விடும் வகையில் விளையாட்டு காட்டின. மேலும் களத்தில் சீறிப் பாய்ந்து வந்த காளைகளை தீரத்துடன் வீரர்கள் அடக்கினர்.
காளைகளை அடக்கிய காளையர் மற்றும் அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் கட்டில், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பலவிதமான பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.